📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 31, 2026 02:33 AM

தவெக ஆட்சிக்கு சிக்கல்? சிபிஎம், சிபிஐ, IUMLஐ மீண்டும் தூக்கும் திமுக... சிக்கலில் விஜய் ஆட்சி!

தவெக ஆட்சிக்கு சிக்கல்? சிபிஎம், சிபிஐ, IUMLஐ மீண்டும் தூக்கும் திமுக... சிக்கலில் விஜய் ஆட்சி!

தவெக ஆட்சிக்கு சிக்கல்? சிபிஎம், சிபிஐ, IUMLஐ மீண்டும் தூக்கும் திமுக... சிக்கலில் விஜய் ஆட்சி!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சியமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில், மாநிலத்தில் புதிய அரசியல் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

தவெக தலைமையில் அமைந்த கூட்டணி அரசில் ஆரம்பத்திலிருந்தே சில கொள்கை முரண்பாடுகள் நீறுபூத்த நெருப்பாக புகைந்து வந்தன. குறிப்பாக, நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் விஜய் தலைமையிலான அரசு எடுத்து வரும் மெத்தனப் போக்கு, கல்வித்துறை தொடர்பான புதிய கொள்கை முடிவுகள் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் மத்திய அரசுடனான இணக்கமான அணுகுமுறை ஆகியவை இடதுசாரி தோழர்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

நீட் விவகாரமும் இடதுசாரிகளின் கொந்தளிப்பும்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் மசோதா மற்றும் மத்திய அரசின் கல்விக்கொள்கை மீதான விவாதங்களின் போது, சிபிஎம் மற்றும் சிபிஐ சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகவே குரல் எழுப்பினர். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய உருப்படியான சட்டப்போராட்டத்தையோ அல்லது களப் போராட்டத்தையோ தவெக அரசு முன்னெடுக்கவில்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், தொழிற்சங்க உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பான தவெக அரசின் சில முடிவுகளும் இடதுசாரிகளின் பாரம்பரியக் கொள்கைகளுக்கு எதிராக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முரண்பாடுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் எதிர்க்கட்சியான திமுக வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ளது.

திமுகவின் ரகசிய ஆபரேஷன் மேக்-பேக்

அறிவாலய வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் சிபிஐ, சிபிஎம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர்களுடன்ரகசியப் பேச்சுவார்த்த நடத்தி வருவதாகத் தெரிகிறது.

தவெக அரசு தனது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது; கொள்கை ரீதியாக வேறுபட்ட இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது இடதுசாரிகளின் கொள்கை அடையாளத்திற்கே ஆபத்து என்ற புள்ளியை முன்வைத்து திமுக தூதுவிட்டு வருகிறது. முஸ்லிம் லீக் அமைப்பிடையேயும், சிறுபான்மையினர் பாதுகாப்பு தொடர்பான தவெக அரசின் நிலைப்பாடு குறித்த சில கேள்விகளை திமுக எழுப்பியுள்ளது.

திமுகவின் திட்டம் மிகத் தெளிவானது

இடதுசாரிகள் (சிபிஐ 2 + சிபிஎம் 2 = 4) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளை தவெக கூட்டணியில் இருந்து விலகச் செய்வது. இதன் மூலம் சட்டசபையில் விஜய் அரசின் பெரும்பான்மையை (118 இடங்கள்) கேள்விக்குறியாக்கி, பேரவையைக் கலைக்கவோ அல்லது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரவோ வழிவகை செய்வது. இன்னும் 4 மாதங்களில் இதை செய்ய முடியும்.

ஆட்சியைத் தக்கவைக்க தவெக நடத்தும் தீவிர சமரசம்

இந்த ரகசிய நகர்வுகள் கசிந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் முகாமிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. கூட்டணியைக் காப்பாற்றவும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கவும் தவெக மூத்த நிர்வாகிகள் உடனடியாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இடதுசாரித் தலைவர்களைச் சந்தித்து சமாதானம் செய்யவும்.. தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், வெறும் வார்த்தை உறுதிமொழிகள் போதாது, கொள்கை ரீதியான நடவடிக்கைகளே முக்கியம் என்பதில் சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

தமிழக அரசியலில் அடுத்த சில மாதங்கள் மிகவும் கொந்தளிப்பானதாக இருக்கும் என்றும், இந்த கூட்டணிப் போரில் யார் கை ஓங்கும் என்பது வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தெரியவரும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.