டில்லி போராட்டத்தில் மாணவர்கள் போர்வையில் தேச துரோகிகள் பங்கேற்பு; தமிழக பா.ஜ., தலைவர் ஆவேசம்
சென்னை: “டில்லியில் மாணவர்களை துாண்டி விட்டு, அவர்கள் பின்னால் ஒளிந்து கொள்ளும் நிலைக்கு, ராகுல் தள்ளப்பட்டுள்ளார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், புதிய உழைப்பாளர் கட்சி இணைந்தது. சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த இணைப்பு நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவர் காந்தி தலைமையில் பலர் பங்கேற்றனர்.பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
முதல்வர் விஜயை விமர்சித்து பேசிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை அதிகாலையிலேயே வீடு தேடிச் சென்று, போலீசார் கைது செய்தனர். ஆனால், பிரதமர் மோடியை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்து வருபவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
டில்லியில் நடக்கும் போராட்டங்களில், மாணவர்கள் போர்வையில் தேச துரோகிகளே பங்கேற்றுள்ளனர். பார்லிமென்டில், முக்கிய மசோதாக்களை கொண்டு வரும்போதெல்லாம், காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களை துாண்டிவிட்டு, அவர்கள் பின்னால் ஒளிந்து கொள்ளும் நிலைக்கு ராகுல் தள்ளப்பட்டுள்ளார்.
இது, காங்கிரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது. ராகுலின் செயலை கண்டித்து, சென்னையில், காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ஜ., இன்று நடத்தும். டில்லி போராட்டத்தில், பாலஸ்தீன கொடி ஏந்தப்படுகிறது. 'நீட்' தேர்வுக்கும், அக்கொடிக்கும் என்ன சம்பந்தம்?
முதல்வர் விஜய் விவரமானவர் என நினைத்தேன். அது உண்மையில்லை என தெரிகிறது. அவரது அமைச்சர்கள், மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாடு செல்கின்றனர். ஒரு திரைப்படத்திற்கு விடுமுறை கேட்கும் அமைச்சரவை, உலகில் எங்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.