உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை.. சுப்மன் கில்லின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை.. சுப்மன் கில்லின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில்லை முந்தி ரிஷப் பண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், நேற்று 66 ரன்கள் குவித்தார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 41 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 2,885 ரன்களுடன் இந்திய அளவில் முதலிடத்திற்கு முன்னேறினார். இப்போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த கேப்டன் சுப்மன் கில், 41 போட்டிகளில் 2,867 ரன்களுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இத்தொடரின் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 6,651 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ரன்கள் குவிப்பில் மட்டுமின்றி, சிக்ஸர்கள் அடிப்பதிலும் ரிஷப் பண்ட் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், மிகக் குறைந்த போட்டிகளில் (51 டெஸ்ட் போட்டிகள்) 100 சிக்ஸர்களை அடித்த உலகின் அதிவேக வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையுடன் பண்ட் சமன் செய்துள்ளார். டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 138 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 462 ரன்களும், இலங்கை அணி 284 ரன்களும் எடுத்தன. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி 193 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு 372 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயம் செய்தது. இலங்கை அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.