UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏன்? புதிய மசோதா தாக்கலுக்கு காரணம் என்ன?
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏன்? புதிய மசோதா தாக்கலுக்கு காரணம் என்ன?
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாக இருந்தாலும், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சர்வர் பராமரிப்பு, KYC சரிபார்ப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் செலவாகிறது. அரசு மானியம் 11% மட்டுமே ஈடுசெய்வதால், மீதத்தை வங்கிகள், சேவை நிறுவனங்கள் தாங்கி வந்தன. இதை சமநிலைப்படுத்த 2026 திருத்த மசோதா மூலம் பெரிய வணிகர்களுக்கு MDR கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைத்தாலும், இதன்பின்னணியில் உள்ள தொழில்நுட்பம், பாதுகாப்பு, சர்வர் பராமரிப்பு மற்றும் 'கேஒய்சி' (KYC) சரிபார்ப்பு ஆகியவற்றிற்காகப் பெருந்தொகை செலவிடப்படுகிறது. யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் கட்டமைப்பைப் பராமரிக்க ஆண்டிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் வரை செலவாகிறது. அரசு வழங்கி வந்த மானியம் இந்தச் செலவில் வெறும் 11 சதவீதத்தை மட்டுமே ஈடுசெய்தது. மீதமுள்ள பெரும் தொகையை வங்கிகளும் யுபிஐ சேவை வழங்கும் நிறுவனங்களுமே ஏற்றுவந்தன. இந்தப்பண இழப்பை ஈடுகட்டவே ‘வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி 50 கோடி ரூபாய்க்கு மேல் வருடாந்திர விற்று முதல் கொண்ட பெரிய நிறுவனங்கள் அல்லது வர்த்தகர்களுக்கு 0.3 சதவீதம் முதல் 0.6 சதவீதம் வரை 'எம்டிஆர்' (MDR) கட்டணம் விதிக்க ஆலோசிக்கப்படுகிறது. அதே நேரம் ஒன்று முதல் ஒன்றரை கோடி ரூபாய் வருடாந்திர விற்று முதல் கொண்ட நிறுவனங்களுக்கு 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. கட்டண விவரங்களை அரசுஅதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக்கட்டணம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளில் 4 சதவீதம் மட்டுமே 2,000 ரூபாய்க்கு மேல் நடக்கின்றன.
ஆனால், பண மதிப்பின்அடிப்படையில் இவை ஒட்டுமொத்தப் பரிவர்த்தனையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன. 96 சதவீதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் 2,000 ரூபாய்க்கு உட்பட்டவை என்பதால், சாதாரணப் பொதுமக்கள் மற்றும் சிறுவணிகர்களின் அன்றாட யுபிஐ பயன்பாட்டிற்கு எவ்விதக் கட்டணமும் இருக்காது என்று நிதித் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.