உத்திரமேரூரில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: நீதிமன்றம் செல்லும் திமுக
காஞ்சிபுரம்: கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் க.சுந்தர், வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பிய சந்தேகத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் வாக்குச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.
அத்தொகுதியில் தவெக வேட்பாளர் முனிரத்தினம் 84,917 வாக்குகள் பெற்று, சுந்தரைவிட 14,223 வாக்குகள் அதிகம் பெற்று வாகை சூடினார்.
எனினும், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த க.சுந்தர், குறிப்பிட்ட 10 வாக்குச்சாவடிகளின் வாக்குப் பதிவுகளை மீண்டும் சரிபார்க்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
அதற்கான கட்டணத்தைச் செலுத்தியதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில், பெல் பொறியாளர்களின் உதவியுடன் இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி கிடங்கில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது.
சரிபார்ப்பின்போது, பழைய வாக்குப் பதிவின் விவிபேட் சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற சுந்தரின் கோரிக்கையைத் தேர்தல் விதிமுறைகளைக் சுட்டிக்காட்டி ஆட்சியர் நிராகரித்தார். இதனால் அதிருப்தியடைந்த சுந்தர், எதிர்ப்புக் கடிதம் அளித்துவிட்டுப் பணிகளைப் புறக்கணித்தார்.
இறுதி நாளில் 314வது வாக்குச்சாவடி இயந்திரத்தை விவிபேட் கருவியுடன் இணைக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பழுதான இயந்திரம் குறித்து வேட்பாளர் தகுந்த முடிவு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் கூறினார்.
“நாங்கள் சந்தேகத்துக்குரியதாகக் குறிப்பிட்டதே 10 இயந்திரங்களைத்தான். அதில் ஒன்று பழுது எனக் கூறுவதை ஏற்க முடியாது. மேலும், விவிபேட் வாக்குச்சீட்டுகள் சரி பார்க்கப்படாததால், தற்போதைய நடவடிக்கை எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளோம்,’’ என்று திமுக வேட்பாளர் க.சுந்தர் கூறினார்.