📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 04, 2026 03:31 PM

”உதயநிதி இன்றே விடுவிக்க வேண்டும்...”

”உதயநிதி இன்றே விடுவிக்க வேண்டும்...”

”உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்...” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய சட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று(ஆகஸ்ட் 04) காலை கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து உதயநிதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரசியல் நோக்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள சூழலில் ரிமாண்ட் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த மனு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டறிந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், உதயநிதியை நீதிமன்றக் காவலில் அடைக்கும் திட்டம் அரசுக்கும் காவல்துறைக்கும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

வழக்கின் அடிப்படையில் சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், விசாரணை நிறைவடைந்ததும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

அரசு தரப்பின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்த நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், விசாரணை முடிந்ததும் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும், அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தியது.

நீதிமன்ற உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் நிலவியது. விசாரணை நடைமுறைகள் முடிந்த பின்னர், அவர் இன்று மாலையே விடுவிக்கப்பட்டு தனது இல்லத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உத்தரவால், உதயநிதி கைது விவகாரம் சட்டரீதியாக புதிய கட்டத்தை எட்டியுள்ளதுடன், தமிழ்நாடு அரசியலிலும் இந்த வழக்கு தொடர்ந்து முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது.