வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜாம்பவான்களே இவ்ளோ பில்டப் செய்வது ஏன்? ஷிகர் தவான் சொன்ன விஷயம்
வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜாம்பவான்களே இவ்ளோ பில்டப் செய்வது ஏன்? ஷிகர் தவான் சொன்ன விஷயம்
மும்பை: இந்திய அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தையும், அவரது மன தைரியத்தையும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் பாராட்டி உள்ளார். 15 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் ஆடி வரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஜாம்பவான் வீரர்களே பாராட்டி பில்டப் செய்வது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
அதற்கு ஷிகர் தவான் தெளிவான பதிலை கூறி இருக்கிறார். 15 வயதில் சர்வதேச போட்டிகளில் ஆடுவது பெரிதல்ல. ஆனால், பயமில்லாமல் ஆட வேண்டும். அந்த இடத்தில் தான் வைபவ் சூர்யவன்ஷி தனித்து தெரிகிறார். அதை ஷிகர் தவான் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ஷிகர் தவான், "15 அல்லது 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடர்களில் களமிறங்கி சிறப்பாக விளையாடுவது சாதாரண விஷயமல்ல. வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தில் சிக்ஸர்களையும் ஃபோர்களையும் பறக்கவிடும் விதம் வியக்க வைக்கிறது. பேட்டிங் திறமை இருப்பது ஒருபுறம் என்றால், 15 வயதிலேயே இவ்வளவு பெரிய மேடையில் பயமின்றி விளையாட தனி மன தைரியம் வேண்டும். அவரது நிகழ்காலமும் எதிர்காலமும் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் 151 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணி 3-0 என தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கி, இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மிக இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
கடந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 237.30 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 776 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஆரஞ்சு தொப்பி மற்றும் தொடரின் சிறந்த வீரர் உட்பட பல விருதுகளை அள்ளினார். மேலும், 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும் 439 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் வைபவ் சூர்யவன்ஷி.