வைபவ் சூர்யவன்ஷிக்கு உண்மையாகவே 15 வயது தான் ஆகுதா? வயதை வைத்து சர்ச்சை.. பிரெட் லீ நெத்தியடி பதில்
வைபவ் சூர்யவன்ஷிக்கு உண்மையாகவே 15 வயது தான் ஆகுதா? வயதை வைத்து சர்ச்சை.. பிரெட் லீ நெத்தியடி பதில்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்த தேவையற்ற சர்ச்சைகளுக்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ பதிலடி கொடுத்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது தான் ஆகிறதா? என சிலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது பற்றி பிரெட் லீ வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
2026 ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி, முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் வைபவ் சூர்யவன்ஷி. இதன் மூலம் இந்திய டி20 அணியிலும் களம் இறங்கும் வாய்ப்பைப் பெற்றார். ஆரம்பத்தில் இங்கிலாந்து தொடரில் சற்றே தடுமாறினாலும், அதைத் தொடர்ந்து நடந்த ஜிம்பாப்வே தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று தனது திறமையை நிரூபித்தார்.
வைபவ் சூர்யவன்ஷி குறித்து யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரெட் லீ, "இந்தியாவிற்கு வெளியே உள்ள பலரும் அவர் உண்மையிலேயே 15 வயது சிறுவனா என்றுதான் கேட்கிறார்கள். அவருக்கு 15 வயதாக இருந்தால் என்ன, அல்லது 17, 18 வயதாக இருந்தால் தான் என்ன? அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? இந்தச் சிறுவனால் சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடிகிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த சிறந்த கண்டுபிடிப்பு இவர்" என்று வெளிப்படையாக பேசினார்.
மேலும் பேசிய பிரெட் லீ, "ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 97 ரன்கள் அடித்ததைப் பார்த்தேன். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய அதிவேகப் பந்துகளை அவர் அசால்ட்டாக சிக்சருக்குப் பறக்கவிட்டார். அவரிடம் இயற்கையான திறமை உள்ளது. ஆனால் அவர் மீது அதிக புகழையும் அழுத்தத்தையும் சுமத்தாமல், ஒரு சிறுவனாக இயல்பாக விளையாட விட வேண்டும்" என்று கூறினார்.
தான் பந்து வீசியிருந்தால் வைபவ்விற்கு தலைக்கு மேலே பவுன்சர் பந்துகளை வீசி சோதித்து இருப்பேன் எனக் கூறிய பிரெட் லீ, அவர் அதை சிக்சருக்குப் பறக்கவிட்டாலும் மீண்டும் பவுன்சர்களை வீசத் தயங்கமாட்டேன் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.