📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology July 19, 2026 11:34 PM

வேன் டிரைவருடன் கள்ளக்காதல்... பாம்பை கடிக்கவிட்டு பள்ளி நிறுவனரை கொன்ற மனைவி

வேன் டிரைவருடன் கள்ளக்காதல்... பாம்பை கடிக்கவிட்டு பள்ளி நிறுவனரை கொன்ற மனைவி

உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியைச் சேர்ந்தவர் அதுல் பன்வார்(வயது 35). இவரது மனைவி தாமினி(30). இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். அதுல்பன்வார் அப்பகுதியில் 150 குழந்தைகள் படிக்கும் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் வேன் டிரைவராக துஷார் என்பவர் வேலை செய்து வந்தார்.

இதனிடையே வேன் டிரைவர் துஷாருக்கும், பள்ளி நிறுவனரின் மனைவி தாமினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் அதுல் பன்வாருக்கு தெரியவந்தபோது அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார். மேலும் வேன் டிரைவர் துஷாரை பணியில் இருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் துஷார்-தாமினி இடையிலான பழக்கம் தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட தாமினி முடிவு செய்தார். இது குறித்து துஷாரிடம் கூறிய நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து அதுல் பன்வாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி துஷார் பாம்பு பிடிப்பவர்களிடம் இருந்து விஷ பாம்பை வாங்கி வந்து தாமினியிடம் கொடுத்தார்.

நேற்று முன்தினம் இரவு தாமினி தனது கணவருக்கு பாலில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். பாலை குடித்த சிறிது நேரத்தில் அதுல் பன்வார் மயக்கமடைந்தார். பின்னர் விஷ பாம்பை எடுத்து வந்து கணவர் மீது போட்டு போர்வையால் மூடினார். விஷ பாம்பு அதுல் பன்வாரை கடித்துவிட்டு சென்றது. பாம்பு கடித்த சிறிது நேரத்தில் அதுல் பன்வார் பரிதாபமாக உயிரிழந்தார்.

காலையில் கண்விழித்த தாமினி கணவரை விஷ பாம்பு கடித்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் அதுல் பன்வாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த வந்த போலீசாரிடம், அதுல் பன்வாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். போலீசார் சந்தேகத்தின்பேரில் தாமினியின் செல்போன் அழைப்புகளை சோதனை செய்தனர். அதில் தாமினி துஷாருடன் நீண்ட நேரம் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து தாமினி மற்றும் துஷாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தபோது பாம்பை கடிக்கவிட்டு அதுல் பன்வாரை கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.