📅 Sunday, 07 June 2026 IST | வைகாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 07, 2026 02:00 PM

“விராட் கோலி அண்ணா என் தோளில் கை வைத்தபோது..” நெகிழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி.. என்ன சொன்னார்?

“விராட் கோலி அண்ணா என் தோளில் கை வைத்தபோது..” நெகிழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி.. என்ன சொன்னார்?

“விராட் கோலி அண்ணா என் தோளில் கை வைத்தபோது..” நெகிழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி.. என்ன சொன்னார்?

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், இந்திய அணியின் புதிய இளம் நட்சத்திரமுமான வைபவ் சூர்யவன்ஷி, தான் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் தீவிர ரசிகராக இருந்ததாகவும், விராட் கோலியுடன் முதன்முதலாகப் பேசிய தருணம் ஒரு கனவு போல் இருந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரின் போது விராட் கோலியைச் சந்தித்தது குறித்துப் பேசிய 15 வயது வைபவ், "உண்மையைக் கூற வேண்டும் என்றால், விராட் கோலி அண்ணா எனது தோளில் கை வைத்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. நான் முன்பு ஆர்சிபி அணியின் ரசிகனாக இருந்தேன். அதைவிட விராட் கோலியின் தீவிர ரசிகன் நான். அவர் என் தோளில் கை வைத்துப் பேசியபோது ஒரு கனவு உலகத்தில் மிதப்பது போல் உணர்ந்தேன்" என்றார்.

மேலும், அந்த சீசனின் போது கோலியிடம் தனது தொப்பியில் கையெழுத்து வாங்கிய வைபவ், தன்னிடம் ஆரஞ்சு தொப்பி இல்லாத போதெல்லாம் கோலி கையெழுத்திட்ட அந்தத் தொப்பியையே அணிந்ததாகக் கூறியுள்ளார்.

கோலி தனக்கு வழங்கிய அறிவுரைகள் குறித்துப் பேசிய வைபவ், "அவர் என்னிடம் பேசிய விதம், அவர் தான் விராட் கோலி என்பதை என்னால் நம்பவே முடியாத அளவுக்கு இருந்தது. ஒரு மூத்த சகோதரனைப் போல என்னை அரவணைத்து அறிவுரைகளைக் கூறினார். நான் என்ன விஷயங்களைச் சிறப்பாகச் செய்கிறேன், இன்னும் எவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், எதிர்காலத்திற்காக எவ்வாறு தயாராக வேண்டும் என்று எனக்குப் பொறுமையாக விளக்கினார்" என்று கூறினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவரும், முன்னாள் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா உடனும் தனக்கு நல்ல உறவு இருப்பதாக வைபவ் தெரிவித்துள்ளார். "ஜெய் சார் என்னை எப்போது பார்த்தாலும் மிகவும் அன்பாகப் பேசுவார். எப்போதும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மிகவும் தூரம் நாம் செல்ல வேண்டியிருப்பதால் எப்போதும் எளிய மனிதனாக இருந்து உழைப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் எனக்கு அறிவுறுத்துவார்" என்றார்.

ஐபிஎல் 2026 தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 237.30 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி மற்றும் தொடரின் மதிப்புமிக்க வீரர் விருதுகளை வைபவ் வென்றார். அவரது அசாத்திய ஆட்டம் காரணமாக, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டி20 அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் தேசிய அணிக்குத் தேர்வான வீரர் என்ற புதிய சாதனையை 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.