📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 04, 2026 09:00 PM

“விடைபெறுகிறேன்.. இந்தியாவுக்காக ஆடிய ஒவ்வொரு நொடியும்..” டெஸ்ட் வீரர் கே.எஸ்.பரத் ஓய்வு அறிவிப்பு

“விடைபெறுகிறேன்.. இந்தியாவுக்காக ஆடிய ஒவ்வொரு நொடியும்..” டெஸ்ட் வீரர் கே.எஸ்.பரத் ஓய்வு அறிவிப்பு

“விடைபெறுகிறேன்.. இந்தியாவுக்காக ஆடிய ஒவ்வொரு நொடியும்..” டெஸ்ட் வீரர் கே.எஸ்.பரத் ஓய்வு அறிவிப்பு

மும்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பரத் (ஸ்ரீகர் பரத்), சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை நேற்று (ஜூன் 4) அறிவித்துள்ளார். 31 வயதான அவர், தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த கே.எஸ்.பரத், 2023 ஆம் ஆண்டு நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். கடைசியாக விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 12 இன்னிங்ஸ்களில் 20.09 சராசரியுடன் 221 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டாலும், பேட்டிங்கில் பெரிய அளவில் ரன் குவிக்க திணறியதால் இவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட், துருவ் ஜூரல் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் வருகையால் இவருக்கான வாய்ப்புகள் குறைந்ததால் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தனது ஓய்வு குறித்து பரத் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், "இந்தியாவிற்காக விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய பெருமை. இந்த பயணம் பெரும் சகிப்புத்தன்மையையும் வலிமையையும் கோரியது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடிய கௌரவம் ஒவ்வொரு நொடிக்கும் தகுதியானது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது 20 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தனது பெற்றோர், சகோதரி மற்றும் பிசிசிஐ, ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனது இந்திய அணி பயணத்தில் முக்கியப் பங்காற்றிய மூத்த வீரர்களுக்கும் அவர் சிறப்பு நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முதன்முதலில் வாய்ப்பளித்த விராட் கோலி மற்றும் தனது தலைமையில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உதவிய கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார். மேலும், இந்திய 'ஏ' அணியிலிருந்து தேசிய அணிக்கு தன்னை வழிநடத்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் தனது நன்றியை உரித்தாக்கியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் விளையாட்டோடு தொடர்ந்து பயணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "பிசிசிஐ மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுடனான எனது பயணம் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் இந்த விளையாட்டில் எனது பயணம் தொடரும். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் இருந்து எனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவேன்" என்று கே.எஸ்.பரத் கூறியுள்ளார்.