வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கலெக்டரிடம் மனு
கோவை: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. 156 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், 'மதுக்கரை ஒன்றியப் பகுதிகளில் சிறுத்தைப்புலி மற்றும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாலும், அலுவலர்கள் தாமதமாக வருகின்றனர். ஒண்டிபுதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து காடுகுட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
எதிர்பார்த்த அளவில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒருங்கிணைந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒரு தரப்பு விவசாயிகள் கருப்புத் துண்டு அணிந்து, அரசுக்கு எதிராக முழக்கமிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.