அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
சென்னை: அண்ணாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கனிமொழி எம்.பி ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம். தலைநிமிர்ந்த தமிழர், தலைநிமிர்ந்த தமிழ்நாடு என்ற லட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர். பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில், சமூகநீதியில், மாநில உரிமையில், தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: “பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் அண்ணா.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் ஏற்றத்துக்கும் மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார். வாழ்க அண்ணாவின் புகழ்.” என்றார்.
கனிமொழி எம்.பி: “ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.
கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் திமு கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!” என்றார்.