சுயநினைவை இழந்த பேருந்து ஓட்டுநருக்கு உதவிய பயணிகளைத் தேடுகிறது டவர் டிரான்சிட்
ஹவ்காங் வட்டாரத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றை நெருங்கியபோது பேருந்து ஓட்டுநர் ஒருவர் சுயநினைவை இழந்தார்.
அந்த ஓட்டுநருக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டிய நான்கு பயணிகளுக்கு நன்றிதெரிவிக்க டவர் டிரான்சிட் பேருந்து நிறுவனம் அவர்களைத் தேடி வருகிறது.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) ஹவ்காங் அவென்யூ 3ல் நிகழ்ந்தது. சேவை எண் 854 பேருந்து ஓட்டுநர் திடீரென இருக்கையில் சாய்ந்து சுயநினைவை இழந்தார். இதனைக் கண்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணி ஒருவர் கதவைத் தட்டி பேருந்தில் இருந்தோரை எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த ஈரடுக்குப் பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் ஓட்டுநருக்கு உதவ விரைந்தனர். அவர்களில் ஒருவர் ஓட்டுநரின் நிலையைக் கவனிக்க, மற்றொருவர் அவசர மருத்துவ வாகனத்தை அழைத்தார்.
மூன்றாவது பயணி, ஓட்டுநர் இருக்கையில் ஏறி, வேகக் கட்டுப்பாட்டு விசையை இயக்கிப் பேருந்தை பாதுகாப்பான முறையில் நிறுத்தினார். பேருந்தை நிறுத்த உதவிய பயணி, ‘டவர் டிரான்சிட்’ கட்டுப்பாட்டு நிலையத்திடம் சம்பவத்தைப் பற்றி விவரித்தார்.
மேலும், உதவி செய்த ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ பேருந்து ஓட்டுநருக்கும் ‘டவர் டிரான்சிட்’ நிறுவனம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குச் செப்டம்பர் 14ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் இ்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தது.
சுயநினைவு இழந்த ஓட்டுநர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பேருந்து ஓட்டுநருக்கு உரிய நேரத்தில் உதவியவர்களுக்கு முறைப்படி நன்றி தெரிவிக்க அவர்களை ‘டவர் டிரான்சிட்’ தேடி வருகிறது.