என்ன வைஸ் கேப்டன்? வைபவ் சூர்யவன்ஷி கைகளை தட்டி சீண்டிய திலக் வர்மா.. உடனே விழுந்த விக்கெட்
என்ன வைஸ் கேப்டன்? வைபவ் சூர்யவன்ஷி கைகளை தட்டி சீண்டிய திலக் வர்மா.. உடனே விழுந்த விக்கெட்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2026 துலீப் டிராபி இறுதிப் போட்டியில், தென் மண்டல அணிக்கு எதிராக கிழக்கு மண்டலத்தின் துணை கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அவரது விக்கெட் விழுந்ததற்கு தென் மண்டல கேப்டன் திலக் வர்மாவின் 'ஸ்லெட்ஜிங்' உத்தியும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், இருவரும் கைகளால் ஒருவரை ஒருவர் தள்ளிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இந்தப் போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. குறிப்பாக, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து சூர்யவன்ஷி மிரட்டினார். இதனால் சிராஜ் பந்துவீச்சில் இருந்து உடனடியாக மாற்றப்பட்டார்.
வைபவ் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த போது, தென் மண்டல கேப்டன் திலக் வர்மா அவரை வம்புக்கு இழுத்து கவனத்தை சிதறடிக்க முயன்றார். ஸ்டம்ப் மைக்கில், "என்னப்பா இது வைஸ் கேப்டன்?" என்று திலக் வர்மா கூறியது தெளிவாகப் பதிவாகியது. கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக இருக்கும் வைபவை அவர் இப்படி வம்பிழுத்ததும், இருவரும் அருகே வந்து ஒருவரை தட்டி விடுவது போன்ற சம்பவம் நடந்தது. இருவரும் கோபமாக மோதிக் கொண்டார்களா? அல்லது சமீபத்தில் இந்திய டி20 அணியில் ஒன்றாக ஆடியதன் அடிப்படையில் நட்பாக கைககளை தட்டி விட்டு பேசிக் கொண்டார்களா? என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த உரையாடல் நடந்து சிறிது நேரத்திலேயே வைபவ் தனது கவனத்தை சிதறவிட்டு, 37 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் மிலிந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மாவின் இந்த சீண்டல் வியூகம் நல்ல பலன் அளித்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி மத்திய மண்டல அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியிலும் 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் அனுபவ வீரர் அபிமன்யு ஈஸ்வரன் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். தென் மண்டல அணியில் தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டு 4 மாற்றங்களுடன் களம் இறங்கினர்.