📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 25, 2026 09:03 AM

IND vs SL: ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.. என்ன நடந்தது? துருவ் ஜுரல் விளக்கம்

IND vs SL: ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.. என்ன நடந்தது? துருவ் ஜுரல் விளக்கம்

IND vs SL: ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.. என்ன நடந்தது? துருவ் ஜுரல் விளக்கம்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பீல்டிங் செய்ய வரவில்லை. அதன் காரணத்தை சக வீரர் துருவ் ஜூரல் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கினார். ஏற்கனவே, பேட்டிங் செய்த போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு பண்ட் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். அடுத்து அவர் பேட்டிங் செய்தாலும், மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது. அது குறித்து துருவ் ஜுரல் கூறி இருக்கிறார்.

கொழும்பில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாட களம் இறங்கிய போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மைதானத்திற்கு வரவில்லை. அவருக்குப் பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த துருவ் ஜூரல், ரிஷப் பண்டின் காயம் குறித்து முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். "ரிஷப் பண்டின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு வலி இருப்பதால் அவர் இன்று பீல்டிங் செய்ய வரவில்லை. பிசியோதெரபிஸ்ட் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து நாளை மைதானத்திற்குத் திரும்புவார் என நம்புகிறேன்" என்று ஜூரல் தெரிவித்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது நாளில், அசிதா பெர்னாண்டோ வீசிய 94 வது ஓவரில் பவுன்சர் பந்து ஒன்று ரிஷப் பண்டின் வலது தோள்பட்டையை பலமாகத் தாக்கியது. பிசியோதெரபிஸ்ட் அவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து சிகிச்சையளித்த பிறகு, அவர் தொடர்ந்து விளையாடி 89 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக முதல் நாள் ஆட்டத்தின் போது, லஹிரு குமாரா வீசிய பந்து அவரது இடது மணிக்கட்டைத் தாக்கியதால் அவர் காயம் காரணமாக தற்காலிகமாக வெளியேறியிருந்தார்.

இரண்டு நாட்களில் இரண்டு காயம் ஏற்பட்ட போதிலும் பண்ட் சிறப்பாக விளையாடினார். ஆனால், வலியின் காரணமாக அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை. இப்போட்டியில் துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கே.எல்.ராகுல் மற்றொரு விக்கெட் கீப்பராக இருந்த போதும், ஜூரலே விக்கெட் கீப்பிங் செய்தார்.

இரண்டாவது நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வீசப்பட்ட 3 ஓவர்களில் ஜூரல் சிறப்பாகச் செயல்பட்டார். இலங்கை அணி தரப்பில் லஹிரு உதாரா மற்றும் நைட்வாட்ச்மேன் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோரின் விக்கெட்டுகளை பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் வீழ்த்தினர். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்துத் தவித்து வருகிறது. இந்திய அணியை விட இலங்கை அணி 495 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.