இந்திய கிரிக்கெட் அணியிலேயே மிகவும் அழகான திறமையான வீரர் என்றால் இவர் தான்.. பாய்காட் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியிலேயே மிகவும் அழகான திறமையான வீரர் என்றால் இவர் தான்.. பாய்காட் கருத்து
மும்பை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜெஃப்ரி பாய்காட் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஜடேஜா ஒரு அழகான நபர் மற்றும் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜடேஜாவை தமக்கு மிகவும் பிடித்த தற்போதைய கிரிக்கெட் வீரர் என்று கூறியிருந்த பாய்காட், தற்போது மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா 1-0 என தொடரை வெல்ல 37 வயதான ஜடேஜா முக்கியப் பங்காற்றினார்.
இந்தத் தலைமுறையின் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று 'ஸ்டிக் டு கிரிக்கெட்' பாட்காஸ்டில் பேசிய பாய்காட் "ஜடேஜா மிக அழகாக பந்துவீசுகிறார், அவரது ஃபீல்டிங் மின்னல் வேகத்தில் அபாரமாக உள்ளது. பேட்டிங்கிலும் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்க்கிறார். அவர் மிகவும் அழகானவர். கடந்த ஆண்டு நான் இந்தியா சென்றிருந்தபோது அவரை முதன்முறையாகச் சந்தித்தேன்.
அப்போது அவரிடம், 'நீங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்' என்றேன். அதற்கு அவர், 'அப்படியெல்லாம் இருக்காது' என்றார். ஆனால் நான், 'நிச்சயமாக நீங்கள்தான்' என்று கூறினேன். மிக அழகானவர் மற்றும் நல்ல குணமுடையவர். அவர் ஒரு முழுமையான சிறந்த ஆல்-ரவுண்டர்."
அண்மையில் முடிந்த இலங்கைத் தொடரின் போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகளைக் கடந்த 4-வது சர்வதேச வீரர் மற்றும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். இதற்கு முன் இயன் போத்தம், டேனியல் வெட்டோரி மற்றும் கபில் தேவ் ஆகியோர் மட்டுமே இச்சாதனையை வரலாற்றுப் புத்தகங்களில் பதிவு செய்துள்ளனர்.