📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 14, 2026 03:33 AM

இடைத்தேர்தல் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்; தவெகவிற்கு நெருக்கடியா?

இடைத்தேர்தல் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்; தவெகவிற்கு நெருக்கடியா?

இடைத்தேர்தல் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்; தவெகவிற்கு நெருக்கடியா? - ஓர் அலசல் பார்வை

இரண்டு தொகுதியிலும் தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள் ஏன் பதவி விலகினார்கள் என்பதையும், இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டத் தேர்தல் என்பதையும் மக்களிடம் விளக்கமாக கூற உள்ளதாகவும் கம்யூனிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Published : September 13, 2026 at 9:12 PM IST

-BY எஸ்.ரவிச்சந்திரன்

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் நிலையில், இது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இதனிடையே, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன. மேலும் தவெக அரசின் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் எனவும், உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பதில் எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்தன. மேலும் தமிழ்நாட்டை இடதுபுறம் திருப்புவோம் என்ற கோஷத்துடன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி இணைந்து செயல்படுவது எனவும் முடிவு எடுத்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தவெக அமைச்சர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினர். ஆனால் தாங்கள் நிர்வாகக் குழுவில் ஆலோசனை செய்து அறிவிப்பதாக அவர்களிடம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நிர்வாகக்குழு கூட்டத்தை தொடர்ந்து இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளும் போட்டியிடுவது என்று முடிவு செய்தனர்.

இதையும் படிங்க:2 தொகுதி இடைத்தேர்தல்: 5 முனை போட்டியால் சூடுபிடித்துள்ள தேர்தல் களம்

மேலும் இந்த இடைத்தேர்தலில் மதசார்ப்பற்ற நிலை தொடர வேண்டிய அவசியம் குறித்தும், ஏழை எளிய மக்களின் பாதிப்புகள் குறித்தும், போதைக் கலச்சாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவு குறித்தும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பரப்புரை செய்ய இருப்பதாக தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தொழிலாளர்கள் நிறைந்தப் பகுதியாகும். அந்த பகுதியில் தவெக அரசின் தனியார் மயக்கொள்கையை எடுத்துக் கூறும்போது, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கட்சியின் பேச்சுகள் அரசிற்கு எதிரான பேசுபொருளாக மாறும் வாய்ப்புள்ளது.

அதேபோல் மதுராந்தகம் தொகுதியில் ஏழ்மை மற்றும் வறுமையில் உள்ளவர்களிடையே போதைப் பொருள் கலச்சாரம் தொடர்ந்து இருப்பதை கூறும்போது பாதிப்பு ஏற்படுத்தும். இரண்டு தொகுதியிலும் தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள் ஏன் பதவி விலகினார்கள் என்பதையும், இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டத் தேர்தல் என்பதையும் மக்களிடம் விளக்கமாக கூற உள்ளதாகவும் தோழர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுகளை நம்பாதவர்களும், கம்யூனிஸ்ட் தோழர்களின் பிரச்சாரத்தை அதிகளவில் நம்புவார்கள். இதனால் கம்யூனிஸ்ட்களின் பரப்புரை என்பது ஆளும்கட்சி வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் தவெகவிற்கு இந்த இடைத்தேர்தல் அவ்வளவு எளிதானதாக இருக்காது என்கின்றனர் அவர்கள்.