கவிமாலை மாணவர் கவிதை நிகழ்ச்சி: தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் நிகழ்வு
தேசிய தினத்தை முன்னிட்டு, கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான சிறப்புக் கவிதை நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை 6 மணிக்குத் தேசிய நூலகத்தில் நடைபெறவுள்ளது.
யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி, ஊட்ரம் உயர்நிலைப்பள்ளி, செயின்ட் ஆன்டனிஸ் கனோசியன் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் அதில் பங்கேற்று தங்கள் கவிதைகளை மேடையில் படைக்கவுள்ளனர்.
மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் அந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மாணவர்கள் தங்களது எண்ணங்கள், அனுபவங்கள், கற்பனைகள் ஆகியவற்றை கவிதை வழியாக வெளிப்படுத்தவுள்ளனர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக ‘ஓப்பன் மைக்’ எனும் அங்கமும் இடம்பெறவுள்ளது. அதில் மாணவர்கள் மட்டுமன்றி தமிழ் ஆர்வலர்களும் தங்கள் கவிதைகளை மேடையில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
மேலும், நிகழ்ச்சியில் ‘சிங்கைச் சிற்பிகள்’ வழங்கும் சிறப்பு நாடகமும் இடம்பெறவுள்ளது. கவிதை, நாடகம் எனப் பல்வேறு கலை வடிவங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அந்நிகழ்ச்சி அமையவுள்ளது.
இளையத் தலைமுறையினரை தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் ஆகியவற்றுடன் இணைக்கும் நோக்கில் கவிமாலை தொடர்ந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளில் அந்நிகழ்ச்சியும் ஒன்று.
மாணவர்களின் திறமைகளை நேரில் கண்டு ரசித்து அவர்களை ஊக்கப்படுத்த அனைவரும் கலந்துகொள்ளுமாறு கவிமாலை அன்புடன் அழைக்கிறது. நிகழ்ச்சிக்கான நுழைவு இலவசம்.