மாஸ்கோவில் அமெரிக்க தூதுக்குழு: உக்ரைன் தாக்குதலை 3 நாட்கள் நிறுத்தி வைக்க புடின் உத்தரவு
மாஸ்கோ: அமெரிக்க தூதுக்குழுவினர் மாஸ்கோ வந்துள்ள சூழலில், உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர், 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், அதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதுவர்களாக ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஸ்னர் ஆகியோர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் புதிய திட்டத்துடன் வந்துள்ள அவர்கள், ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ளனர். மாஸ்கோ வந்துள்ள அவர்களின் திட்ட விவரங்கள் பற்றி பொது வெளியில் எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இந் நிலையில், அமெரிக்க தூதுக்குழு மாஸ்கோ வந்துள்ள இத்தருணத்தில், உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். அதற்கான உத்தரவை பாதுகாப்பு படையினருக்கு அவர் வழங்கி உள்ளார்.
மாஸ்கோ வந்துள்ள அமெரிக்க தூதுக்குழுவினர், புடின் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதன் பின்னர், அவர்கள் செப்.6ம் தேதி கீவ் நகருக்கு செல்கின்றனர். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசுகின்றனர் ----