மேகதாது அணை: 9 லட்சம் மரங்கள், தமிழகத்தின் எதிர்ப்பு
பெங்களூரு: மேகதாது அணை தொடர்பாகத் தமிழக, கர்நாடக அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்துவரும் நிலையில், அந்த அணை தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை திட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடக அரசு அண்மையில் இந்திய நீர் ஆணையத்திடம் அளித்தது. அதில் பல்வேறு சர்ச்சைகளுக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேகதாது அணை கட்டுமானத்திற்காக ஏறக்குறைய 12,500 ஏக்கர் அடர்ந்த வனப்பகுதி அழிக்கப்பட உள்ளதாகவும் அதன் காரணமாக 8.90 லட்சம் மரங்கள் முற்றிலும் வெட்டிச் சாயக்கப்பட உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 7 லட்சம் சிறிய மரங்களும் ஒரு லட்சம் பெரிய மரங்களும் அடங்கும் எனவும் கூறப்படுகிறது.
மிகப் பெரிய வனப்பகுதியை அழித்து, அணை கட்டுவது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்த காவிரி ஆறு வற்றிப்போகும் ஆபத்து உள்ளது என்றும் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டினால் தமிழகத்திற்கான காவிரி நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டு, தமிழக அரசு இத்திட்டத்திற்கு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கை தமிழகத் தரப்புக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இந்தத் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.