📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 31, 2026 03:04 PM

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்ததால் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி இடங்கள் மூழ்கின

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்ததால் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி இடங்கள் மூழ்கின

கொளத்தூர் அடுத்த தெலுங்கனூர் பகுதியில் நடந்த வந்த அகழாய்வு தளம் நீரில் மூழ்கியது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தொல்லியல் துறை அகழாய்வு நடத்திய பகுதி நீரில் மூழ்கியது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தெலுங்கனூர், மாங்காடு பகுதிகள் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ளன. மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும் போது அப்பகுதியில் அதிகளவிலான கல் வட்டங்கள் இருப்பதைக் காண முடியும். இவை உள்ளூர் மக்களால் பாண்டியன் திட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் வாள், அம்பு, முதுமக்கள் தாழி, பெரிய மற்றும் சிறிய அளவிலான பானை மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், கீழடியை தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய இடங்களில், தொல்லியல் துறை ஆய்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து மேட்டூர் அடுத்து தெலுங்கனூரை மையமாகக் கொண்டு தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அகழாய்வு நடந்து வரும் பகுதிகள் நீரில் மூழ்க தொடங்கியுள்ளன. இதனால் அகழாய்வு பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், “தெலுங்கனூர், மாங்காடு பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து வருவதற்கு முன்பே அகழாய்வு பணிகள் அப்பகுதியில் முழுமையாக முடிந்து விட்டது. அகழாய்வில் மனிதர்களின் எலும்புக் கூடுகள், அவர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, கத்திகள், ஈட்டிகள், பானை, கல் மணிகள், கோடாரி, இரும்பிலான எஃகு வாள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. அகழாய்வு இடம் நீரினால் மூழ்கினால் எதுவும் பாதிப்பில்லை. தற்போது, மாங்காடு பகுதியில் மட்டுமே அகழாய்வு பணி நடந்து வருகிறது” என்று அதிகாரிகள் கூறினர்.