மேட்டூர் அணை தாமதமாக திறப்பால் பாதிப்பு ஏற்படும்: தி.மு.க., விமர்சனம்
சென்னை: 'மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதால், 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும்,' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மேட்டூர் அணை, ஜூன் 12-ல் திறப்பதற்கு பதில், த.வெ.க. ஆட்சியில், தாமதமாக திறக்கப்பட்டதால், குறுவை பருவ நெல் சாகுபடி குறைந்துள்ளது.
ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடி பயிர்கள் வளர்ந்து, அறுவடைக்கு வர 140 நாட்கள் வரை தண்ணீர் தேவைப்படும். அணையின் தற்போதைய நீர் இருப்பை வைத்து, 45 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஒட்டுமொத்த சம்பா, தாளடி சாகுபடிக்கு, 205 டி.எம்.சி., தண்ணீர் தேவை. அணையில், பாதி அளவு மட்டுமே நீர் இருப்பது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாசன வாய்க்கால்கள் காய்ந்து கிடப்பதால், அணையில் திறக்கும் தண்ணீர், நிலத்தில் உறிஞ்சப்பட்டு, டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு சென்றடைய, கூடுதல் நாட்களாகும். மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.