📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 26, 2026 05:00 AM

மத்திய அமைச்சர் கட்கரி அரசியலில் இருந்து ஓய்வு?

மத்திய அமைச்சர் கட்கரி அரசியலில் இருந்து ஓய்வு?

நாக்பூர்: ''என்னால் முன்பு போல அதிகமாக வேலை செய்ய முடியவில்லை. பொறுப்புகளை இளம் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, 69, தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

இப்போதெல்லாம் என்னால் முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. என்னால் முடிந்த போது கடுமையாக உழைத்தேன். தற்போது என் ஈடுபாடு குறைந்துள்ளது. பொறுப்புகளை இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது.

இளம் தலைமுறையினருக்கு நாம் வழிகாட்ட வேண்டும். பொது வாழ்க்கையில், 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். பல ஏற்றத்தாழ்வுகளை கண்டுள்ளேன்; பல விருதுகளை பெற்றுள்ளேன். ஆனால் தற்போது, என்னால் அதிகம் பணியாற்ற முடியவில்லை.

இளம் தலைமுறையினர் செயல்பட வாய்ப்பு அளிக்க வேண்டும். மஹாராஷ்டிராவில் மின்சாரம் இல்லாத பழங்குடியின கிராமம் எதுவும் இருக்கக்கூடாது. மாநிலம் முழுதும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதே என் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த பேச்சு, அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமும் நடந்தது.

இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகம், 'நிதின் கட்கரியின் கருத்துக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தன் அறக்கட்டளை பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றே அவர் கூறினார்.

'அந்தப் பணிகளை இளம்தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டார்' என, தெளிவுபடுத்தியது.

பா.ஜ., தேசிய தலைவராக, கடந்த ஜனவரியில் நிதின் நபின் பொறுப்பேற்றது முதல், இளம் தலைமுறையினருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் கட்சியில் தேசிய அளவில் நியமிக்கப்பட்ட, 76 நிர்வாகிகளின் சராசரி வயது, 55. இந்த சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த கருத்து பேசுபொருளாகி உள்ளது.