ஒடிசா பெண்ணை கூறுபோட்டுக் கொன்ற அசாமில் கைதான தம்பதி விமானத்தில் சென்னை வருகை: தாம்பரம் காவல் ஆணையரகத்தில் விசாரணை
ஒடிசா பெண்ணை கூறுபோட்டுக் கொன்ற அசாமில் கைதான தம்பதி விமானத்தில் சென்னை வருகை: தாம்பரம் காவல் ஆணையரகத்தில் விசாரணை
சென்னை: கூடுவாஞ்சேரியில் ஒடிசா பெண் துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கணவன், மனைவியை கவுகாத்தியில் இருந்து போலீசார்சென்னைக்கு அழைத்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்பக்க பெட்டியில், சிவப்பு நிற சூட்கேசில் தலை இல்லாமல் பெண் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், சென்னை கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த அசாமை சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகபதி மாஜி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிப்பூர் மற்றும் அசாமில் இருவரையும் தாம்பரம் மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை அங்குள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி, டிரான்சிட் வாரன்ட்கள் வாங்கிக் கொண்டு, இருவரையும் பலத்த பாதுகாப்புடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கவுகாத்தியிலிருந்து நேற்று இரவு 9 மணி அளவில் சென்னைக்கு கொண்டு வந்தனர். அதன்பின்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.