பாரதிராஜாவும், பாக்யராஜும் சொல்லி சென்ற பாடம்.. வைரமுத்து நெகிழ்ச்சி.. என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், திரைக்கதை மன்னன் பாக்யராஜும் சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார்கள். இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சூழல் இப்படி இருக்க நேற்று அவர்கள் இரண்டு பேரின் நினைவை போற்றும் விதமாக; சென்னை கலைவாணர் அரங்கத்தில் ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதிராஜா. பல புரட்சிகளை திரையில் செய்த அவர் தன் மகன் மனோஜை இழந்ததிலிருந்தே உடல்நிலை சரியில்லாமல் போனார். தொடர்ந்து சிகிச்சை பெற்றவந்த அவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிழிருந்தே தமிழ் சினிமா மீளாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சூழலில் அடுத்த சில வாரங்களில் அதாவது ஜூன் 27ஆம் தேதி அவரிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு திரைக்கதை மன்னரான பாக்யராஜும் உயிரிழந்தார்.
சென்னையில் நிகழ்ச்சி: இரண்டு பேருமே ஜாம்பவான்கள் ஆவர். அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும்பாலானோரை சோகத்தில் தள்ளியது. இந்நிலையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் 'ராஜ கோபுரங்களின் நினைவு உற்சவம்' என்ற பெயரில் நிகழ்வு நடந்தது. அதில் ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், சீமான், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அனைவருமே அவர்கள் இரண்டு பேர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள். மேலும், பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கும் ஒரு கைதியின் டைரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
வைரமுத்து ட்வீட்: இந்நிலையில் அந்த நிகழ்வு குறித்து வைரமுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "மறைந்த பேராளுமைகள் பாரதிராஜா - கே.பாக்யராஜ் இருவர்க்கும் கலைத்துறையினர் புகழ்வணக்கம் செலுத்தினார்கள்
அந்த மேடையில் கே.பாக்யராஜ் எழுதிய சுயசரிதை நூலை வெளியிட்டுப் பேசினேன்
தமிழ்க் கலாசாரத்தின் ஆதிச் சுவடுகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்துபோகக் கூடும்
கிராமக் கலாசாரத்தின் அடையாளங்களை அறிந்துகொள்ள வேண்டுமெனில் பாரதிராஜாவின் படங்களைக் கீழடிபோல் பாதுகாக்கவேண்டும்
தமிழ்ச் சமூகத்தில் நிலவிவந்த பாலியல் வறட்சி ஆணையும் பெண்ணையும் அழுத்தி வைத்தது
அந்தக் கலாசார அடக்குமுறைகளைத் தாண்டி ஆணின் கனவுகளையும் பெண்ணின் ஆசைகளையும் வாய்விட்டுப் பேசவைத்தவர் என்று எதிர்காலத்தில் பாக்யராஜ் அறியப்படுவார்
இருபெரும் கலைஞர்களும் கலையை வாழ்விலிருந்து கற்றுக்கொண்டு திரையில் ஒளிபெயர்த்தவர்கள்
'வாழ்விலிருந்து கதை எழுதுங்கள்'
இதுதான் இளம் கலைஞர்களுக்கு அவர்கள் சொல்லிச்சென்ற பாடம்" என உருக்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.