📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 09, 2026 12:03 PM

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட 9 மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட 9 மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட 9 மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு 9 மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

அண்மையில் சட்டசபையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று அறிவித்த முதல்வர் விஜய், தற்போதைய தலைமை செயலகமாக செயல்படும், புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படும் என்றும் அறிவித்தார். புதிய தலைமை செயலகம் எங்கு அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பட்டினப்பாக்கம் எனப்படும் போர்ஷோர் எஸ்டேட்டில் சுமார் 25.16 ஏக்கரில் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கு, தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட உள்ள பகுதிக்கு தெற்கில் முள்ளிக் குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம்,இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் ஆக மொத்தம் 9 குடியிருப்பு பகுதிகள் இருமருங்கிலும் ஒரு கிலோமீட்டருக்கு உள்ளாகவே உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மீனவ மக்கள் ஆவர். புதிய தலைமைச் செயலகம் அமையும் பட்சத்தில் தங்களுடைய வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும் என்று இவர்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடம் பள்ளி மண்டலம் (School zone) என்று அழைக்கப்படுகிறது. இங்கு புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, பான்சகர்ஸ் பள்ளி, சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மான்ஃ போர்ட் மெட்ரிகுலேசன் பள்ளி, செயின்ட் பீட்ஸ் பள்ளி, ரோசரி மெட்ரிகுலேசன் பள்ளி, புனித ரப்பேல்ஸ் பள்ளி ஆகியவை உள்ளன. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் இப்பள்ளிகளில் பயிலகின்றனர்.

வார நாட்களில் காலையிலும் மாலையிலும் பள்ளி- மாணவ மாணவியர் அலை மோதுவதால், புதிய தலைமைச் செயலையும் கட்டத் திட்டமிட்டுள்ள பகுதிக்கு மேற்கில் உள்ள சாந்தோம் நெடுஞ்சாலையும், கிழக்கில் உள்ள கடற்கரை லூப் சாலையும் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஏற்கனவே ஆட்சி புரிந்த திமுக, அதிமுக அரசுகள் பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்யவில்லை. கள நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் இடத்தை மட்டும் கணக்கில் கொண்டு தலைமைச் செயலத்தை இங்கு கட்ட தவெக அரசு முடிவு செய்துள்ளதாகஇப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். அரசின் முடிவு பத்திரிகைகள் வாயிலாக வெளியானவுடன் ஒன்பது கிராம மீனவ மக்களின் பிரதிநிதிகளும் அவசரமாகக் கூடி விவாதித்தனர். வருகிற 15.09.2026 அன்று சீனிவாசபுரத்தில் அனைத்து மீனவ அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஒன்பது கிராம ங்கள் தவிர பழவேற்காடு முதல் கோவளம் வரை உள்ள மீனவ மக்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் தமிழக அரசின் இந்த முடிவைக் கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரசு மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது .

மயிலாப்பூரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளுடன் மீனவமக்களின் பிரதிநிதிகள் பேசி வருகின்றனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பாதிக்கப்படும் பிரச்சனை என்பதால் அவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மீனவர் சங்கத் தலைவர்கள் கு.பாரதி (நெய்தல் மக்கள் கட்சி 9444467130), கபடிமாறன் (தமிழ்நாடு மீனவ மக்கள் முன்னேற்ற சங்கம்,9840060342) ஆகியோர் இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்கையில், மீனவ மக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பெரும் அதிருப்தியை சம்பாதிக்கும் முன் தமிழக அரசு இங்கு தலைமைச் செயலகம் கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று கூறினர்.