ரசிகர்களை டார்ச்சர் செய்துவிட்டேன்.. இந்த முறை மிஸ் ஆகாது.. சர்தார் 2வில் சொல்லி அடிக்கும் கார்த்தி
சென்னை: தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த மற்றும் கதை ஞானம் உள்ள நடிகர்களில் ஒருவர் கார்த்தி. அவர் இப்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். செப்டம்பர் பத்தாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; படத்தின் விழாவில் அவர் பேசிய விஷயம் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் கார்த்தி. அதன் பிறகு பருத்திவீரன் திரைப்படத்தில் நடிகராகிவிட்டார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அப்போதிருந்து நிற்காமல் கார்த்தியின் வண்டி நடிகர் ரூட்டில் ஜோராக ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் கொஞ்சம் சறுக்கவே செய்திருக்கிறார் அவர். இருப்பினும் மீண்டும் மீண்டும் எழுந்துவிடுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக கடந்த சில படங்கள் அவருக்கு நல்ல மெமரிஸை கொடுக்கவில்லை என்றே தெரிகிறது.
டல்லான ரசிகர்கள்: தன்னுடைய முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் கண்டிப்பாக கார்த்தி வித்தியாசமான ஜானரைத்தான் கொடுக்கிறார். அதிலும் அவர் ஒரே இயக்குநருடன் மீண்டும் பணியாற்றுவது ரொம்பவே அரிதுதான். அப்படி கதை ஞானம் உள்ள அவர் கடைசியாக நடித்த வா வாத்தியார், மெய்யழகன், ஜப்பான் ஆகிய மூன்று படங்களும் வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை.
சர்தார் 2: மூன்று படங்களுமே வெவ்வேறு கதை களத்தோடு வந்தவை. புது முயற்சியாகவும் இருந்தன. இவற்றில் மெய்யழகன் திரைப்படத்தை ரசிகர்கள் க்ளாசிக் படமாக கொண்டாடினாலும்; வணிக ரீதியான பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. மற்ற இரண்டு படங்களின் நிலையும் அனைவருக்கும் தெரியும். இத்தனைக்கும் ராஜூ முருகன், நலன் குமாரசாமி ஆகிய இயக்குநர்கள் தரமான இயக்குநர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். ஆனால் ஏதோ மிஸ் ஆகி படம் படுத்துவிட்டது. இப்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்திருக்கிறார்.
கார்த்தி பேச்சு: செப்டம்பர் பத்தாம் தேதி ரிலீஸாகிறது படம். இதில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்தி படத்தின் விழாவில் பேசுகையில், "மூன்று வருடங்களாக நான் எனது ரசிகர்களை டார்ச்சர் செய்துவிட்டேன் என்பது எனக்கு தெரியும். நான் ஜப்பான் படத்தில் நடித்தேன். ராஜூ முருகனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பார்த்தபடி அந்தப் படம் போகவில்லை.
கொண்டாடியது மகிழ்ச்சி: அதற்கு பிறகுதான் ஆவேஷம் படத்தை பார்த்தேன். ஜப்பான் படமும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. அதற்கு பிறகு எந்தவிதமான ஆக்ஷன் காட்சிகளும் இல்லாமல் மெய்யழகன் படத்தை செய்தேன். நம்ம பசங்களுக்கு ஆக்ஷன் பிடிக்கும். இருப்பினும் அந்தப் படத்தை க்ளாசிக் படமாக கொடுக்க வேண்டும் என விரும்பினேன். அதை நீங்கள் அனைவரும் கொண்டாடியது, கொண்டாடுவது மகிழ்ச்சியாக இர்க்கிறது.
முழுதாக இறங்கி அடித்திருக்கிறோம்: இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் விரும்பினேன். அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். இந்த முறை ரசிகர்களாகிய உங்களுக்கு எந்தக் குறையையும் வைக்கவில்லை. முழுதாக இறங்கி அடித்திருக்கிறோம்" என்றார்.