📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 13, 2026 10:33 PM

ஸ்டாலின் உத்தரவை மீறி விஜயை கடுமையாக விமர்சித்த தி.மு.க.,வினர்

ஸ்டாலின் உத்தரவை மீறி விஜயை கடுமையாக விமர்சித்த தி.மு.க.,வினர்

- நமது நிருபர் -

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவை மீறி, முதல்வர் விஜயை, தனிப்பட்ட முறையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

சட்டசபையில் கடந்த 7ம் தேதி பேசிய முதல்வர் விஜய், தி.மு.க.,வின் கடந்த கால ஊழல் புகார்கள் குறித்தும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத் துறை குற்றச்சாட்டு போன்றவற்றையும் எடுத்துரைத்தார்.

மேலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'மிசா' சட்டத்தில் கைதானதையும் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'வீடியோ பதிவு' ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டார். உடனே, 'யாரையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை' என முதல்வர் விஜய் விளக்கம் அளித்தார்.

எனினும், விஜயை கண்டித்து தி.மு.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், பங்கேற்போர், தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்காமல், மாண்புடன் பேசுமாறு, ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

அதையும் மீறி, ராஜா எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர், விஜயை மிகக்கடுமையாக விமர்சித்து பேசினர். அமைச்சர் நிர்மல் குமாரை மிகவும் இழிவுபடுத்தி ராஜா பேசினார்.

இதையடுத்து, அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அறிக்கையில், 'நீங்கள் திருந்த வாய்ப்பில்லை. தமிழக அரசியலில் இருந்து, தி.மு.க.,வின் முடிவுரையை, விரைவில் மக்கள் எழுதுவர் என்பது மட்டும் நிச்சயம்' என தெரிவித்து இருந்தார்.

தி.மு.க., -எம்.பி., கனிமொழியும், 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என, திருக்குறளை கூறி, மறைமுகமாக ராஜா பேச்சை கண்டித்தார்.

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் போன்றோரும், ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் பற்றி பேசியதற்காக, வருத்தம் தெரிவித்து தி.மு.க., -எம்.பி., ராஜா வெளியிட்ட அறிக்கை:தியாகத்தில் விளைந்த ஒரு தலைவன் அடையாளத்தை, உண்மையை, திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு மீண்டும், மீண்டும் கொச்சைப்படுத்தி ஏளனம் செய்தனர். அதனால் ஏற்பட்ட வலியை உணர்த்த, ஏளனம் செய்தவரின் அடையாளத்தை, உண்மையை, உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கு வருத்தம் தான். என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்கு தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.