திமுக செயற்குழுவில் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை: திமுகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.
கழக மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த ஒன்பது முக்கியத் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கழகத்தின் 16வது அமைப்புத் தேர்தலை நடத்தி நிர்வாக மாற்றங்களை மேற்கொள்வது தொண்டர்களை உற்சாகமடைய வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும் ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் புதிதாகக் கிளைக் கழகங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநகராட்சிகளிலும் நிர்வாகச் சூழலுக்கு ஏற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக்கொள்ள வழிவகை செய்யப்படும்.
மேலும், வட்டம், பகுதி, நகரம், ஒன்றியம் மற்றும் பேரூர்க் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒன்றியக் கழகங்கள் 30,000 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் அமையுமாறு மறுசீரமைக்கப்படும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கட்சியின் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 77ல் இருந்து 110ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் மாவட்டக் கழகங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என்றும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மாவட்டக் கழகங்கள் அதிகரிக்கும் காரணத்தால் மாநகரச் செயலாளர்கள் எனும் பொறுப்பின் தேவை எழவில்லை என இக்கூட்டத்தின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
புதிய 110 மாவட்டக் கழகங்களைக் கட்சித் தலைவர் அறிவித்ததும் 15 நாள்களுக்குள் பிற அமைப்புகளை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.