தமிழகத்தில் பெண்கள் கட்டணமின்றி எத்தனை பஸ்களில் பயணிக்கலாம் தெரியுமா?
தமிழகத்தில் பெண்கள் கட்டணமின்றி எத்தனை பஸ்களில் பயணிக்கலாம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தை விரிவாக்கம் செய்து காந்தி பிறந்தநாளான வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் 'வெற்றி பயணம்' திட்டத்தை செயல்படுத்த உள்ளார்.
அதன்படி, முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பஸ்கள் மட்டுமின்றி, மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்களிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பஸ்களில் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
72 லட்சம் பெண்கள்
இந்த நிலையில், தற்போது புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ள 'வெற்றி பயணம்' திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பஸ்கள் என கூடுதலாக 2 ஆயிரத்து 302 பஸ்களில் வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க உள்ளனர். இது தவிர, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக 2 ஆயிரத்து 47 சாதாரண கட்டண புறநகர் பஸ்களிலும், 275 சாதாரண கட்டண மலைப்பகுதி பஸ்களிலும் வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
அதன்படி, தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 334 பஸ்களில் வெற்றி பயண திட்டத்தின் மூலம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மொத்தமாக புதிய வெற்றி பயணம் திட்டத்தின்படி, ஏற்கனவே பயணித்த பஸ்களைவிட கூடுதலாக 4 ஆயிரத்து 624 பஸ்கள் பெண்களின் கட்டணமில்லா பயணத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தினசரி ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தினசரி பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.