📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 15, 2026 07:33 PM

தொடர்ந்து இந்திய அணியில் இடமில்லை.. மனதில் தோன்றியது என்ன? குல்தீப் யாதல் ஓபன் டாக்

தொடர்ந்து இந்திய அணியில் இடமில்லை.. மனதில் தோன்றியது என்ன? குல்தீப் யாதல் ஓபன் டாக்

தொடர்ந்து இந்திய அணியில் இடமில்லை.. மனதில் தோன்றியது என்ன? குல்தீப் யாதல் ஓபன் டாக்

மும்பை: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், சமீபகாலமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தமக்கு விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார். அணியில் விளையாடத் தகுதியானவராக தன்னை நிர்வாகம் கருதாதபோது, அது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2021 முதல் ஜூன் 2024 வரையிலான ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ், குல்தீப் அனைத்து வகை போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 60 போட்டிகளில் விளையாடினார். இது மாதத்திற்கு சராசரியாக இரண்டு போட்டிகள் என்ற அளவில் இருந்தது. ஆனால், கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் 38 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதாவது மாதத்திற்கு சராசரியாக 1.5 போட்டிகளில் மட்டுமே அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அணி நிர்வாகம் அவரைப் புறக்கணிப்பதற்கான உதாரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், குல்தீப்பைச் சேர்ப்பதற்குப் பதிலாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இந்தியா முடிவு செய்தது.

அதேபோல், சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட குல்தீப், இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஆஃப்-ஸ்பின்னர் சரண்ஷ் ஜெயின் அந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

இது குறித்து பேசிய குல்தீப், "சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக, நாம் அணியின் சூழல் மற்றும் உத்திகளுக்கு ஏற்பச் செல்ல வேண்டியிருக்கும். நீங்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறாதபோது, உங்களுக்காக நீங்களே வருத்தப்படுவது இயற்கையான ஒன்றுதான்" என்று தெரிவித்துள்ளார்.

"நீங்கள் அணியில் இருக்கும்போது விளையாட விரும்புகிறீர்கள், ஆனால் அணி நிர்வாகத்தின் உத்திகளால் சில நேரங்களில் அது நடப்பதில்லை. கடந்த ஆண்டு ஒரு சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினேன், ஆனால் பரவாயில்லை. அடுத்த முறை பார்க்கலாம்," என்று அவர் கூறினார்.

இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், மாற்று வழிகளைத் தேடிய குல்தீப் யாதவ், யார்க்ஷயர் அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடினார். அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், மூன்று போட்டிகளில் 12 என்ற சிறப்பான சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

"இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அனுபவம் பேட்டர்கள் மற்றும் ஸ்பின்னர்களுக்கு மிகவும் நல்லது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். இங்கு ஆங்காங்கே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்றாலும், சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பழகிக்கொள்ள இது உதவுகிறது. சொந்த நாட்டில் விளையாடி வளர்ந்ததால் அங்குள்ள சூழல் நமக்கு நன்றாகத் தெரியும் என்பதால், இதுபோன்ற சவால்களை நாம் சொந்த மண்ணில் எதிர்கொள்ள முடியாது" என்று கவுண்டி கிரிக்கெட் அனுபவம் குறித்து குல்தீப் பேசியுள்ளார்.

தற்போது இந்திய அணியின் டி20 சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயமடைந்து அணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் மீண்டும் குல்தீப்பை அணியில் சேர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.