Today Top News : இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 10 ABP Nadu Evening Headlines, 14 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.
திமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-08-2026 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கி மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
மத்திய பாஜக அரசிடம் அடிமையாக, ஏன் கொத்தடிமையாக திமுக சென்றுவிட்டது என்று பரபரப்பாக பேட்டி அளித்திருக்கிறார் சட்டத்துறை அமைச்சர் CTR நிர்மல்குமார், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆட்சியில் இருக்கும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக, இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறது. அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிப்போம் என்று ஏன் அவர்களால் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக-வின் முக்கிய தலைவர்கள், திமுக ஆதரவாளர்கள் பல இடங்களில் பொதுவெளியில் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, சைதாப்பேட்டை தொகுதியில் அவர் செய்தது போல யாரும் செய்தது இல்லை. கலைஞரே முதலமைச்சராக இருந்தார். அவர் கூட அந்த டைம் பெரிய மருத்துவமனை கொண்டு வர முடியவில்லை. இங்கே பக்கத்தில் ஆலந்தூரில் இருப்பவர்களுக்கு பெரிய வசதியாக இருந்தது. அந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், அவங்க சொந்தக்காரர்கள் வாக்களித்து இருந்தாலே ஜெயிச்சுருப்பாரு. அவனுங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்றார்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையாளர் அருண் நியமிக்கப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 2 மாதங்களுக்கு முன்பாகவே அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்த துறையை கையாளும் கூடுதல் பொறுப்பு ஐபிஎஸ் அதிகாரி சி. மகேஸ்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையை மறுசீரமைக்கவும் உடனடியாக முழுநேர இயக்குநரை நியமிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு 4 வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக நியமிக்க, ஆனந்த் குமார் சோமானியின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதன் மூலம் ஆட்சியேற்ற 100 நாட்களிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கடந்த திமுக அரசை போன்று தவெக அரசு இருந்துவிடக் கூடாது என வலியுறுத்தியதோடு, தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கான சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.
இன்று கனமழை எச்சரிக்கை:
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணரிமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி