ஊட்டச்சத்துக்கள் மிகுந்த காலை உணவு மாணவர்களுக்கு வழங்க முதல்வர் அறிவுரை
சென்னை: 'காமராஜர் காலை உணவு திட்டத்தில், மாணவர்களுக்கு சூடான, சுவையான, உரிய அளவிலான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவு வழங்க வேண்டும்' என முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 'முதல்வரின் காலை உணவு திட்டம்' கடந்த தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய, தமிழக வெற்றிக்கழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கு 'காமராஜர் காலை உணவு திட்டம்' என, பெயரிடப்பட்டு உள்ளது. திட்டம் விரிவாக்கம் வாயிலாக, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
இந்த விரிவாக்க திட்டத்திற்கு, நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒட்டுமொத்த காலை உணவு திட்டத்திற்கு, மொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தலைமை செயலகத்தில், முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், முதல்வர் விஜய் கூறியதாவது: காமராஜர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தும் சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் இடங்களை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். அவற்றை தொடர்ச்சியாக, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்க வேண்டும்.
இத்திட்டத்திற்காக பணியாற்றும், அனைத்து துறை அலுவலர்களும், முறையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை, ஒருங்கிணைத்து செயல் படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
தலைமை செயலக வளாகத்தில், அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி: தமிழகத்தில், வரும் 22ம் தேதி, காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. திட்டத்தை முதல் வர் எங்கு தொடங்கி வைப்பார் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பரிந்துரைகளை வழங்க, ஒரு குழு அமைக்கப்படும். புழல் சிறையில் உள்ள கைதிகள் கூட, 'சிக்கன் பிரியாணி' சாப்பிடுகின்றனர். நமது பள்ளி குழந்தைகளும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு உள்ளது. வரும் காலத்தில் நிச்சயமாக, பள்ளிக் குழந்தைகளுக்கு 'சிக்கன் பிரியாணி' வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.