விசிக ஆளும் கட்சியாக மாறும்; தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் திருமாவளவன் பேச்சு
விசிக ஆளும் கட்சியாக மாறும்; தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் திருமாவளவன் பேச்சு
மாநாட்டில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், திருமாவளவன் அவரது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
Published : August 17, 2026 at 9:44 PM IST
கள்ளக்குறிச்சி: எதிர்காலத்தில் ஆளும் கட்சியாக விசிக மாறும் என அக்கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. திருமாவளவனின் பிறந்த நாளான இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இன்று முதலமைச்சர் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளோம். இனி தமிழக வெற்றிக் கழகத்துடனேயே விசிக இணைந்து செயல்படும்" என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விசிக உருவெடுத்துள்ளது. இதை இந்த மாநாடு உறுதிப்படுத்தி உள்ளது. நாம் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உள்ளோம். வரும் காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும். திமுக, அதிமுக என இத்தனை ஆண்டுகளாக ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்த நாம், இனி ஆளும் கட்சியாக மாறுவோம்" என்றார்.
முன்னதாக பேசிய அவர், "இலங்கை அரசு புதிதாக அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரையறுக்க உள்ளது. கடந்த 77 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிர்கொண்டு வரும் இன பாகுபாடு, நில ஆக்கிரமிப்பு, தமிழர் அடையாள சிதைப்பு, தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றம் மற்றும் அரசியல் உரிமைகள் மறுப்பு உள்ளிட்டவை இன்னும் மேலோங்க புதிய அரசியலமைப்பு சட்டம் வழிவகுக்கும்.
ஆகையால், தமிழர்களின் வாழ்வுரிமை முற்றிலுமாக சிதையக் கூடும். எனவே, புதிய சட்டம் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.
இன்று காலை முதலே கூட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விசிக தொண்டர்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் குவிந்த நிலையில், அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, திருமாவளவன் மேடையேறவே போராடும் அளவுக்கு கூட்டல் நெரிசல் ஏற்பட்டது. இதனால் டென்ஷனான அவர் தொண்டர்களை காட்டமாக பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இந்த சூழலில் அவர் தனது உரையை பாதியிலேயே முடித்துக் கொண்டார்.