யார் அந்த கருப்பு ஆடு? போலீசாரிடையே அடிதடி
ஈரோடு: போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு அழைத்து வந்தவரை தாக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில், வீடியோவை யார் வெளியிட்டது என்ற விவாதத்தில், போலீசார் அடித்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஓய்வறையில், மகாதேவா, 19, என்பவரை, போலீசார் சேர்ந்து கம்பால் கடுமையாக தாக்குவதும், அவர் கதறி அழுவதுமாவன வீடியோ பரவியது.
இதுபற்றி மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்த நிலையில், ஈரோடு மாவட்ட போலீஸ் அறிக்கையில், 'அந்த வீடியோ, 2024ல் எடுக்கப்பட்டது. குற்ற வழக்கு பின்னணியில் இருந்தவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ' என, தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக, நேற்று முன்தினம் ஸ்டேஷனில் பணி செய்த ஒரு எஸ்.ஐ., - ஒரு போலீஸ்காரர் ஆகியோரிடம் எஸ்.பி., கிரண் ஸ்ருதி உள்ளிட்டோர் விசாரித்தனர்.
சம்பவம் நடந்த போது, தாளவாடி ஸ்டேஷனில் பணிபுரிந்தவர்களில் சிலர், தற்போதும் அங்கு பணியில் உள்ளனர். அவர்களில், யார் வீடியோ எடுத்து வெளியிட்டனர் என்பது தொடர்பாக, நேற்று முன்தினம் ஸ்டேஷனில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அங்கு புகார் தெரிவிக்க வந்த மக்கள் தடுத்து சமாதானம் செய்துள்ளனர். வீடியோவை விட, போலீசார் அடித்துக் கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, எஸ்.பி., கிரண் ஸ்ருதி கூறுகையில், ''இவ்விரு சம்பவங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்த பின் தெரிவிக்கிறோம்,'' என்றார்.