11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்
சென்னை: 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், 'என்ரிகா' நிறுவனத்தின், 11 மது வகைகளை விற்க விதிக்கப்பட்ட தடை, ஒரே நாளில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும், பீர் மற்றும் மது வகைகள் விற்கப்படுகின்றன.
அப்படி, 'என்ரிகா எண்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் மது வகைகளில், செயற்கை சுவையூட்டும் பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அந்த நிறுவனத்தின், 11 மது வகைகள் விற்பனைக்கு, மதுக்கடைகளில் தடை விதித்து, டாஸ்மாக் மேலாண் நந்தகுமார், கடந்த, 13ம் தேதி உத்தரவிட்டார். இந்த தகவல் நேற்று முன்தினம் வெளியானது.
இந்நிலையில், உணவு பாதுகாப்பு ஆணைய கடிதத்தின் அடிப்படையில், என்ரிகா நிறுவனத்தின், 11 மது வகைகளை டாஸ்மாக் கடைகளில் விற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க, மது விலக்கு துறை ஆணையர், நேற்று முன்தினம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த தகவல் நேற்று வெளியானது.
ஒரே நாளில் மது வகைகள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில்,'விதித்த தடையை வெறும், 24 மணி நேரத்தில் நீ க்கும் அளவிற்கு, அப்படி என்ன நடந்தது. பயமா, பதற்றமா, பேக்கரி டீலிங்கா. என்னவா இருக்கும்' என்று கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:
ஒரு தனியார் நிறுவனத்தில், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய அதிகாரிகள், 'தங்களில் ஆய்வின் அடிப்படையில், 11 மது வகைகளுக்கு தடை விதிக்கவும்' என, மது விலக்கு ஆயத்தீர்வை துறைக்கு சுற்றறிக்கை அனுப்பினர். அதை, டாஸ்மாக்கிற்கு வழங்கி, அந்த மது வகைகளை விற்கக்கூடாது என, தெரிவிக்கப்பட்டது.
தற்போது, ஆணையம், 'ஆராய்ந்து பார்த்ததில், சுவையூட்டி இயற்கையாக உருவாக்கப்படுகிறது. அந்நிறுவனத்திடம் மது வகைகளை வாங்கலாம்' என, கடிதம் அனுப்பியது. அது, டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்டது.
தினமும், 50 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை, மத்திய அரசு தான் கண்காணிக்கும். மாநில அரசு கண்காணிக்க முடியாது. தமிழக அரசு, மதுபான ஆலைகளில், மது வகைகளில் எவ்வளவு ஆல்கஹால் கலக்கப்படுகிறது என்று தான் ஆய்வு செய்யும். இந்த புகார் வந்ததை அடுத்து, ஆய்வில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுக்கு யாரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது. காழ்ப்புணர்ச்சியுடன் எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுக்காமல், நடுநிலையுடன் பார்க்க வேண்டும். 'ஆன் லைன்' விற்பனையில், மது வாங்குவோருக்கு, மது தராத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.