📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 16, 2026 10:03 AM

காந்தி ஜெயந்தியில் தொடங்கும் 2027 உலகக்கோப்பை.. ஐசிசி வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.. காரணம் என்ன?

காந்தி ஜெயந்தியில் தொடங்கும் 2027 உலகக்கோப்பை.. ஐசிசி வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.. காரணம் என்ன?

காந்தி ஜெயந்தியில் தொடங்கும் 2027 உலகக்கோப்பை.. ஐசிசி வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.. காரணம் என்ன?

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்த உள்ள 2027 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 அன்று தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திர போராட்டம் மட்டுமின்றி, இந்த உலகக்கோப்பையை நடத்த உள்ள தென் ஆப்பிரிக்காவின் சுதந்திர போராட்டத்திலும் மிக முக்கிய பங்காற்றியுள்ளதை பெருமைப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இந்த உலகக்கோப்பை தொடரை அக்டோபர் 8 அன்று தொடங்க ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது காந்தியின் 158வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அக்டோபர் 2 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இதற்கான பயிற்சி ஆட்டங்கள் செப்டம்பர் மாத இறுதியிலேயே தொடங்கிவிடும்.

இந்த உலகக்கோப்பை தொடர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய 3 நாடுகளில் உள்ள 12 சர்வதேச மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நவம்பர் 21 அன்று நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்று முறையில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தரவரிசையில் பின் தங்கியுள்ள கடைசி 3 அணிகள் 'சூப்பர் சீரிஸ்' என்ற சுற்றில் முத்தரப்பு போட்டிகளில் மோதி, இறுதி 12 இடங்களுக்குள் வர போராட வேண்டும். அக்டோபர் 2 அன்று இந்த தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்குமா அல்லது முதன்மை ஆட்டங்கள் தொடங்குமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.

இந்தியாவின் விடுதலைக்காக சத்யாகிரக வழியில் போராடிய மகாத்மா காந்தி, இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படுகிறார். அதேபோல், தென் ஆப்பிரிக்காவில் அவர் இளம் வழக்கறிஞராக இருந்தபோது அங்கு நிலவிய நிறவெறிக்கு எதிராக தீவிரமாக போராடினார். தென் ஆப்பிரிக்காவில் காந்தி கழித்த 21 ஆண்டுகள் தான் அவரின் அரசியல் கொள்கைகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் வரலாற்றிலும் முக்கிய இடம் பிடித்துள்ள காந்தியின் பிறந்தநாளில் உலகக்கோப்பை தொடங்குவது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக பார்க்கப்படுகிறது.