📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 03, 2026 07:32 AM

2026 காமன்வெல்த் முடிவில் கொடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.. 2030

2026 காமன்வெல்த் முடிவில் கொடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.. 2030

2026 காமன்வெல்த் முடிவில் கொடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.. 2030-ல் அகமதாபாத் நடத்துகிறது

கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 2) பிரம்மாண்ட நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. இந்த நிறைவு விழா முடிவில் காமன்வெல்த் தொடரின் அதிகாரப்பூர்வ கொடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்த உள்ளதால் இவ்வாறு கொடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து அடுத்த காமன்வெல்த் தொடரை நடத்தும் பொறுப்பு அகமதாபாத் நகரம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிறைவு விழாவின் போது, காமன்வெல்த் விளையாட்டின் அதிகாரப்பூர்வ கொடியை இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பிடி உஷா மற்றும் குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் கிளாஸ்கோவிடம் இருந்து அடுத்த காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் பொறுப்பு அகமதாபாத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டின் 100-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் இந்த 24-வது காமன்வெல்த் போட்டிகள் 2030-ல் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து, 2030 போட்டிகளில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிறைவு விழாவில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையை குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா பெற்றார். 'வசுதைவ குடும்பகம்' (உலகமே ஒரு குடும்பம்) என்ற தத்துவத்தை முன்னிறுத்தி இந்தியாவின் கலை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டன.

'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நடிகை மனுஷி சில்லர் தலைமையில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் இணைந்து நடனம் ஆடினர். சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி மற்றும் குஜராத்தி பாடகி பூமி திரிவேதியின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்திய சிதார் கலைஞர் ரிஷப் சர்மா மற்றும் ஸ்காட்டிஷ் கலைஞர் ராஸ் ஐன்ஸ்லி ஆகியோரின் கூட்டு இசை நிகழ்ச்சி (ஜுகல்பந்தி) இரு நாட்டு கலாச்சாரத்தின் பாலமாக அமைந்தது.

இந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது. 2026 காமன்வெல்த் போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், இந்திய வீரர்களின் கவனம் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தத் தொடரில் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்திய இந்திய விளையாட்டு வீரர்கள், தற்போது ஆசிய விளையாட்டில் மீண்டும் பதக்கங்களை வேட்டையாட உள்ளனர்.