இங்கிலாந்து தொடரில் விராட் கோலி பங்கேற்பாரா? ஜூன் 22ஆம் தேதி பிசிசிஐ முக்கிய முடிவு
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி பங்கேற்பாரா? ஜூன் 22ஆம் தேதி பிசிசிஐ முக்கிய முடிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் கிரிக்கெட் அணியில் தனது இடத்தை உறுதி செய்வதற்காக ஜூன் 22 அன்று பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மையத்தில் முக்கியமான உடற்தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளார். ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரில் இருந்து அவர் சமீபத்தில் விலகினார்.
விராட் கோலி, CoE உடற்பயிற்சி நிபுணர்கள் வழங்கிய அறிவுறுத்தல் அடிப்படையில் இங்கிலாந்தில் தங்கி தனது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். சமீபத்தில் லண்டனில் இருந்தபோது, இங்கிலாந்து மற்றும் ஆர்சிபி (RCB) அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோர்டான் காக்ஸ் உடன் அவர் காணப்பட்டார். பெங்களூருவில் விராட் கோலியின் உடற்தகுதி தேர்வு முடிந்த பிறகே தேர்வுக்குழுவினர் அணியை அறிவிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
"CoE தரப்பில் லண்டனில் இருந்த விராட் கோலியைத் தொடர்பு கொண்டனர். அதன் பிறகு அவருக்கு ஒரு உடல்தகுதியை மீட்க சில வழிமுறைகள் வழங்கப்பட்டது. விராட் கோலி தனது காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். ஜூன் 22 அன்று விராட் கோலி CoE மையத்திற்கு வருவார், அங்கு அவருக்கு மீண்டும் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் ரன் குவித்து, ஆர்சிபி அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வெல்ல வழிநடத்தினார். இதன் மூலம் இந்த ஆண்டின் முதல் பாதி அவருக்கு மிகச் சிறந்ததாக அமைந்தது.
இங்கிலாந்து ஒருநாள் தொடரையும் தவறவிடும் ஹர்திக்
இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்த குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய அவர், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் தவறவிட உள்ளார். ஐபிஎல் 2026 தொடரின் பாதியில் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட இந்த அனுபவமிக்க வீரர், உடற்தகுதிக்கு உட்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். பெங்களூருவில் நடந்த உடற்தகுதி தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றாலும், அடுத்த நாளே அவருக்கு புதிய காயம் ஏற்பட்டதால் உள்நாட்டு தொடரில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆகிய டி20 தொடர்களுக்கான அணியில் தேர்வு செய்யப்படாத ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தனியாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், ஒருநாள் போட்டிகளுக்குத் தேவையான முழுமையான பந்துவீச்சு அளவை எட்டாததால் அவர் மீண்டும் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
"ஒருநாள் போட்டி வடிவத்திற்குத் தேவையான பந்துவீச்சு பயிற்சி மற்றும் உடற்தகுதியை ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாகப் பெறவில்லை. எனவே ஒருநாள் போட்டிகளுக்கு முழு உடற்தகுதியை மீண்டும் பெற அவருக்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படும்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 14 அன்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் தொடங்க உள்ளது.