📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil May 28, 2026 03:33 AM

மலேசியாவில் சிக்கிய 31.57 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள்

மலேசியாவில் சிக்கிய 31.57 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள்

கோலாலம்பூர்: மலேசியாவின் பூச்சோங், செராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஃபென்டனைல் போதைப்பொருள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை மின்சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள்.

வடக்கு மாநிலங்கள் வழியாக அந்தப் போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குநர் ஹுசேன் ஒமார் கான் கூறினார்.

பூச்சோங் பட்டறையிலும் செராஸ் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 31 வயது, 33 வயது உள்ளூர் ஆடவர் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஃபென்டனைல் திரவம் அடங்கிய 400 மின்சிகரெட் கருவிகள், 612.12 கிலோகிராம் எடையுள்ள மெத்தெம்ஃபெடமின், 6.4 கிலோகிராம் எடையுள்ள எரிமின் 5 மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அந்த ஒட்டுமொத்த போதைப்பொருள்களின் மதிப்பு 31.57 மில்லியன் ரிங்கிட் (S$10.1 மில்லியன்) என்று திரு ஹுசேன் கூறினார்.

கைதுசெய்யப்பட்டோரில் ஒருவர் பொருள்களை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்பவர் என்றும் மற்றொருவர் கடை ஊழியர் என்றும் அறியப்படுகிறது.

அந்த இருவரும் கடந்த ஆண்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட இடங்களில் போதைப்பொருள் நிரம்பிய கார்களை விட்டுச் செல்வதன் மூலம் உள்ளூர்ச் சந்தைகளில் போதைப் பொருள்களை அவர்கள் இருவரும் விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருளை வாங்கும் நபர் காரை ஓட்டிச்சென்று போதைப்பொருளை எடுத்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் காரை திரும்ப நிறுத்திவிடுவது வழக்கமாக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டது.

ஃபென்டனைல் நிரம்பிய பொருள்களைப் பொட்டலமிட மலேசியாவை ஒரு தளமாக அந்தக் கும்பல் பயன்படுத்தியதாகத் திரு ஹுசேன் சொன்னார்.