📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 25, 2026 11:03 PM

'35 நிமிட விவாதம்; கப்சிப் உதயநிதி; பரந்தூரை தாங்கும் தங்கம் தென்னரசு!

'35 நிமிட விவாதம்; கப்சிப் உதயநிதி; பரந்தூரை தாங்கும் தங்கம் தென்னரசு!

'35 நிமிட விவாதம்; கப்சிப் உதயநிதி; பரந்தூரை தாங்கும் தங்கம் தென்னரசு! - பின்னணி என்ன?

பரந்தூர் குறித்து 35 நிமிடங்களுக்கு நீண்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவையில் இருந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சர்கள் காரசாரமாக பேசிய போதும் ரியாக்சனே கொடுக்காமல் இருந்தார்.

சட்டமன்றத்தில் நடந்து வரும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டது. 35 நிமிடங்களுக்கு பரந்தூர் விவகாரம் பற்றி மட்டும் விவாதிக்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் அவையில் இருந்துமே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஒரு வார்த்தை கூட பேசாமல் கப்சிப்பென அமைதியாக இருந்தார். இதன் பின்னணி என்ன?

இன்று நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் பேசிக்கொண்டிருந்தார். பல்வேறு விஷயங்களை பேசிய அவர் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின் தங்குவதாக பேசியிருந்தார். இதற்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதில் பேசியிருந்தார். இந்த விவாதம் அப்படியே நகர்ந்து பரந்தூர் விமான நிலையம் நோக்கி சென்றது.

இந்த விவாதத்தில் கிட்டத்தட்ட எல்லா கட்சியினரும் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் கீர்த்தனா, ஆதவ், நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் எதனால் திட்டம் ரத்து செய்யப்பட்டது என விலக்கி பேசினர். கம்யூனிஸ்ட்டுகள் திட்டம் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று பேசினர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி 'திட்டம் ரத்து செய்யப்படுவதெல்லாம் சரி. ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை என்ன செய்யப்போகிறீர்கள்?' என முக்கியமான கேள்வியை எழுப்பினார். பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமாரும் இதே கேள்வியை கேட்டார். திமுக சார்பில் தங்கம் தென்னரசுவும் எ.வ.வேலுவும் இந்த விவாதத்தை முன்னெடுத்தனர்.

ஒரு கட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் தங்கம் தென்னரசுவுக்கும் இடையே 'ஜி ஸ்கோயர் மாப்பிள்ளை, லாட்டரி மருமகன்' என விவாதம் காரசாரமாக சென்றது. பரந்தூர் கிராமம் விமான நிலையம் கட்ட ஏதுவான இடம் கிடையாது என பாய்ண்டுகளை அடுக்க, தங்கம் தென்னரசு எதனால் பர்ந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது என பாய்ண்டுகளை அடுக்கினார். அமளி துமளியாக இந்த விவாதம் நடந்தது. 35 நிமிடங்களுக்கு நீண்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவையில் இருந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சர்கள் காரசாரமாக பேசிய போதும் ரியாக்சனே கொடுக்காமல் இருந்தார்

இதுசம்பந்தமாக கோட்டை வட்டாரத்தில் திமுக முகாமில் பேச்சுக் கொடுக்கையில், 'பரந்தூர் விமான நிலைய விவகாரம் விவசாயிகள் சம்பந்தப்பட்டது. கட்சியாக இந்தத் திட்டத்தை ஆதரித்தாலும் தனிப்பட்ட முறையில் தலைமை இந்த விவகாரத்தை பேசினால், ஆளுங்கட்சி சின்னவரை 'விவசாயிகளுக்கு எதிரானவர்' ஆக சித்தரிக்க வாய்ப்பிருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என கருப்பு சட்டை போட்டு எதிர்ப்பு தெரிவித்த சில நாட்களிலேயே பரந்தூர் விவகாரத்தில் ஓப்பனாக பேசினால் அது அவையில் சின்னவருக்குதான் எதிராக முடியும்.

அதனால்தான் தலைவரே சின்னவரை இந்த விவகாரத்தில் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார். தங்கம் தென்னரசு மீது ஒரு பாசிட்டிவ் இமேஜ் இருக்கிறது. அவர் என்ன பேசினாலும் தரவுகளோடு பக்குவமாக பேசுவார். மேலும், பரந்தூர் விவகாரத்தில் அமைக்கப்பட்ட குழுக்களில் பயணித்த முன்னாள் அமைச்சர் என்பதால் தலைமை அவரின் தலையில் பரந்தூரை இறக்கி வைக்க முடிவெடுத்து விட்டது' என்றனர்.