6 ஆண்டுகளுக்கு பிறகு லிபுலேக் கணவாய் திறப்பு :இந்தியா திபெத் இடையே மீண்டும் வர்த்தகம் தொடக்கம்!
இந்தியா திபெத் இடையே லிபுலேக் கணவாய் வழியாக வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது. லிபுலேக் கணவாயானது 17,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு வர்த்தகப்பாதை ஆகும்.
லிபுலேக் கணவாயானது 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா போருக்குப் பிறகு மூடப்பட்டது. அதன்பின்னர் 1992-ல் வர்த்தகம் மீண்டும் தொடங்கியது, பிறகு கோவிட் பெருந்தொற்று காரணமாக 2019-ல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடமானது திறக்கப்பட்டதை அடுத்து ஒன்பது வர்த்தகர்கள் மற்றும் எட்டு உதவியாளர்கள் உட்பட 17 பேர் கொண்ட குழு தக்லகோட் பகுதிக்கு வரத்த்கத்திற்காக சென்றுள்ளது. குறிப்பாக தக்லகோட் பாரம்பரியமாகவே இமயமலையில் உள்ள வர்த்தக சமூகங்களை இணைக்கும் ஒரு முக்கிய வணிக சந்தையாகும். இந்த நிலையில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்திய வர்த்தகர்கள் பெரும்பாலும் மசாலாப் பொருட்கள், தேயிலை, வெல்லம், சர்க்கரை மிட்டாய், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.
மேலும் கம்பளி, பஷ்மினா, யாக் முடி, ஆடைகள், காலணிகள் மற்றும் பிற உள்ளூர் தயாரிப்புகளை இறக்குமதி செய்து வருகின்றனர்.
வாழ்வாதாரம்
இந்த வழித்தடமானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் தார்ச்சுலா மற்றும் அதன் அருகில் உள்ள எல்லை கிராமங்கள் புத்துயிர் பெறுவதோடு மட்டுமல்லாமல் வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதரத்திற்கு இந்த வழித்தடதிறப்பு ஆதரவளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.