600 பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகள் கொண்டுவந்த ஆடவர் கைது
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் ‘எம்பிவி’ வாகனம் ஒன்றில் 600க்கும் மேற்பட்ட பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வாகனத்தின் தரைப் பலகையை வெட்டித் திறந்துபார்த்த அதிகாரிகள் அந்தக் கள்ள சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.
இம்மாதம் 4ஆம் தேதி, மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தில் சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் தீவிரச் சோதனைகளை மேற்கொண்டனர்.
அதுதொடர்பில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் மூலம் வெட்டப்பட்ட நிலையில் இருந்த பலபயன் வாகனத்தின் தரைப் பலகையின் கீழ்ப்பகுதியில் பெட்டிகள் நிறைய கள்ள சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
வாகனத்தின் பின்பகுதியிலும் கள்ள சிகரெட்டுகள் கொண்ட பல பெட்டிகள் காணப்பட்டன.
தனது ஒருங்கிணைந்த கண்காணிப்பு நிலையத்திடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வாகனத்தில் கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக ஆணைய அதிகாரிகள் கூறினர்.
சம்பவம் தொடர்பில் வாகனத்தை ஓட்டிய 26 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கள்ள சிகரெட்டுகளுடன் அந்த ஆடவரும் கூடுதல் விசாரணைக்காகச் சிங்கப்பூர்ச் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்குவது, விற்பது, வைத்திருப்பது போன்றவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் கைப்பற்றப்பட்ட கள்ள சிகரெட்டுகளின் மதிப்பைவிட 40 மடங்குக் கூடுதல் அபராதம், ஆறாண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.