📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 15, 2026 09:34 PM

ஆம்னி பஸ்சில் 40 பவுன் நகைகள் கொள்ளை: மத்தியபிரதேசத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது!

ஆம்னி பஸ்சில் 40 பவுன் நகைகள் கொள்ளை: மத்தியபிரதேசத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது!

நெல்லை மாவட்டம், பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 56). இவருடைய மனைவி ஜூலியட். இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு செல்வதற்காக கடந்த மாதம் 27-ந் தேதி இரவில் நெல்லையில் இருந்து ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் சுமார் 40 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்திருந்தனர். அந்த பஸ், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடியை கடந்து கரிசல்குளம் விலக்கு அருகில் சென்ற போது, சாலையோர ஓட்டலில் பயணிகள் சாப்பிடுவதற்காக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

அப்போது அந்த கைப்பையை பஸ்சிலேயே வைத்து விட்டு ஜஸ்டினும், ஜூலியட்டும் உணவு சாப்பிட சென்றனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பஸ்சுக்குள் வைத்திருந்த கைப்பையில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் காயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஸ்சில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சம்பவ நேரத்தில் பதிவான செல்போன் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்படியும், கோவில்பட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு நீல் சர்மா ஆலோசனையின் படியும், கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்துக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியான மக்சூத் கான் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 40 பவுன் தங்க நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. ஆனால் இந்த நகை கொள்ளையில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளான ரபிக் (40), கடுக்கான் என்ற முகதின் கான் ஆகிய 2 பேர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மக்சூத்கானை தனிப்படை போலீசார் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.