ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து 13,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டநிலையில் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.1,07,840 க்கு விற்பனையானது.
சர்வதேச நிலவரங்களால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 03) ஆபரண தங்கம் கிராம், 13,250 ரூபாய்க்கும், சவரன், 1,06,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 235 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஆகஸ்ட் 04) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 13,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,05,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,240 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 280 ரூபாய் அதிகரித்து 13,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் அதிகரிப்பு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 240 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.