“ஆடினா விக்கெட் கீப்பராதான் ஆடுவேன், இம்பாக்ட் பிளேயராக..”.. தோனி பிடிவாதம்.. பத்ரிநாத் தகவல்
“ஆடினா விக்கெட் கீப்பராதான் ஆடுவேன், இம்பாக்ட் பிளேயராக..”.. தோனி பிடிவாதம்.. பத்ரிநாத் தகவல்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐபிஎல் தொடரில் 'இம்பாக்ட் பிளேயர்' விதியின் கீழ் விளையாட விரும்பவில்லை என்றும், அவர் முழுநேர விக்கெட் கீப்பராகவே களமிறங்க விரும்புகிறார் என்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில் இந்த தகவலை பத்ரிநாத் கூறி இருக்கிறார்.
தோனியின் உடற்தகுதி மற்றும் 2027 ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. காயம் காரணமாக கடந்த 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட தோனி விளையாடவில்லை. 2023 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்த தோனி, அப்போது ஏற்பட்ட காயத்தால் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது இருந்து அவரது உடற்தகுதி தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய பத்ரிநாத், "தான் ஒருபோதும் இம்பாக்ட் பிளேயராக விளையாட விரும்பவில்லை என்று தோனி என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினார். அவர் தன்னை ஒரு முழுநேர விக்கெட் கீப்பராகவே பார்க்கிறார். அதாவது 20 ஓவர்களும் அவர் மைதானத்தில் ஃபீல்டிங் செய்ய விரும்புகிறார். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தோனி இம்பாக்ட் பிளேயராக விளையாடினால் அது சிஎஸ்கே அணிக்கு பெரும் பலன் அளிக்கும். அவரது உடல்நிலை நீண்ட நேரம் விளையாடுவதற்கு ஒத்துழைக்காது என்பதை சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்கும் கூறினார்" என்றார்.
மேலும், "தோனி பொதுவாக 16-வது ஓவருக்குப் பிறகே பேட்டிங் செய்ய களம் இறங்குகிறார். இதனால் அவர் இம்பாக்ட் பிளேயராக விளையாடுவதே சிறந்தது, ஆனால் அவர் அதை விரும்பவில்லை" என்றார் பத்ரிநாத். அவரது இந்த முடிவு, வரும் 2027 ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வியையும் ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.
மேலும், சிஎஸ்கே அணியில் உள்ள குளறுபடிகள் பற்றி பேசிய பத்ரிநாத் இம்பாக்ட் வீரர் விதியை சிஎஸ்கே சரியாக பயன்படுத்தவில்லை என்றார். "சிஎஸ்கே அணியில் சிவம் துபேவுக்கு பந்துவீச வாய்ப்பளிக்காததற்கும், அகீல் ஹொசைனை சரியாகப் பயன்படுத்தாததற்கும் இம்பாக்ட் பிளேயர் விதியைக் குறை சொல்லக் கூடாது, அது சிஎஸ்கே அணியின் தவறான உத்தியே காரணம்" என்று பத்ரிநாத் கூறினார்.