உலகக்கோப்பைக்கு முன் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் இந்தியா.. பிசிசிஐ
உலகக்கோப்பைக்கு முன் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் இந்தியா.. பிசிசிஐ-யின் புதிய திட்டம்
மும்பை: 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில், அந்த தொடருக்கு முன் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி திட்டமிட்டுள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 4 முதல் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகின்றன. இந்தத் தொடர், தென்னாப்பிரிக்காவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.
இந்திய அணியுடன் கிரிக்கெட் தொடர் ஆடினால் அதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்பதால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கு ஒப்புக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 2023 டிசம்பரில் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாடியது. அப்போது டெஸ்ட் தொடரை முன்னிட்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் ஒருநாள் போட்டி சாதனைகள் சுமாராகவே உள்ளன. அங்கு இதுவரை 59 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 24 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 31 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன், 3 போட்டிகள் முடிவில்லாமலும், ஒரு போட்டி டை ஆகவும் முடிந்துள்ளது.
முன்னதாக, 2003 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, ஆஸ்திரேலியாவிடம் 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ரன்னர்-அப் ஆனது. அதன் பின்னர் 2007-ல் அங்கு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
2027 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் நடத்த உள்ளன. தென்னாப்பிரிக்காவில் மொத்தம் 8 மைதானங்களிலும், ஜிம்பாப்வேயில் 3 மைதானங்களிலும், நமீபியாவில் ஒரு மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.