ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன்
ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?
குடியாத்தத்தில், சீருடையில் இருந்த பெண் போலீஸ் ஏட்டுவைக் கொடூரமாகக் குத்திக் கொன்ற கணவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அர்வின் (45) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தாமரைச்செல்வியின் மாமன் மகன்தான் அர்வின். நெருங்கிய உறவினர் என்பது மட்டுமில்லாமல், ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு 12 வயதில் பிரித்விராஜ், 10 வயதில் கௌதம் என்று இரு மகன்களும், 4 வயதில் லட்சுமிதேவி என்று ஒரு மகளும் உள்ளனர்.
தனது கணவன் அர்வின் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் ஆட்டோ வாங்கிக் கொடுத்திருக்கிறார் தாமரைச்செல்வி. அப்போதும் பகல் நேரங்களில் மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டாமல் இருந்திருக்கிறார். இரவிலும் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால் தாமரைச்செல்வி கோபமடைந்திருக்கிறார். இருவரும் அடிக்கடி சண்டைப் போட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு தாமரைச்செல்வியின் பெற்றோர் தங்களின் விவசாய நிலத்தில் வேர்க்கடலை சாகுபடி செய்திருக்கின்றனர். அதனருகில், தாமரைச்செல்வியின் கணவரின் குடும்பத்துக்குச் சொந்தமான நிலமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், இருக் குடும்பத்துக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
வேர்க்கடலை சாகுபடியின்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டதால் தனது மாமனார் - மாமியாரிடம் தனது பெற்றோருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம் தாமரைச்செல்வி. இதனால், `வீட்டுப் பக்கம் வராதே. உங்க அப்பா, அம்மா கூடவே போய்டு’ என்று மாமியார் திட்டியதால், கோபித்துக்கொண்டு அதே பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம் தாமரைச்செல்வி.
அங்கிருந்தபடியே, தினமும் வேலைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பிறகு இரவு 7 மணிக்கு வீடு திரும்ப முயன்றார் தாமரைச்செல்வி. அப்போது அங்குவந்த அவரின் கணவன், தாமரைச்செல்வியை பின்தொடர்ந்து சென்று நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
தாமரைச்செல்வி சேர்ந்து வாழ மறுத்ததாகச் சொல்லப்படுவதால், ஆத்திரமடைந்த கணவன் அர்வின் மறைத்துக் கொண்டுவந்திருந்த கத்திரிக்கோலால் சரமாரியாக தாமரைச்செல்வியைக் குத்தினார். கழுத்து, கை, நெஞ்சுப்பகுதி என 11 இடங்களில் குத்துபட்டதில் தாமரைச்செல்வி சுருண்டு விழுந்தார்.
சீருடையில் பெண் போலீஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தாமரைச்செல்வி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தாமரைச்செல்வியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, மனைவியை கொடூரமாகக் கொலை செய்த அர்வின் அதே கத்திரிக்கோலால் தனது நெஞ்சுப் பகுதியிலும் குத்தி தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக, குடியாத்தம் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து அர்வினிடம் கொலைக்கான காரணம் பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.