📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 31, 2026 12:04 PM

ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் ரூல்ஸ்

ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் ரூல்ஸ்

ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் ரூல்ஸ்-க்கு முடிவு கட்ட வாய்ப்பு.. 10 அணிகளுக்கும் பிசிசிஐ கடிதம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள 'இம்பாக்ட் பிளேயர்' விதியைத் தொடரலாமா அல்லது நீக்கலாமா என்பது குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அனைத்து ஐபிஎல் அணிகளிடமும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கருத்து கேட்டு இருந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் (ஆகஸ்ட் 31, திங்கள்கிழமை) முடிவடைகிறது.

கடந்த 2026 ஐபிஎல் சீசனில் இந்த விதியின் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டன. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாகவும் அமைந்தது. மேலும், ஆல்-ரவுண்டர்களின் முக்கியத்துவத்தை இந்த விதி குறைப்பதாக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த இந்திய வீரர்கள் பலர் பகிரங்கமாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதற்கிடையே, 2026 ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்த விதி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருந்தார். முன்னதாக, கடந்த மே மாதம் இந்த விதிக்கு ஆதரவாகப் பேசிய அவர், போட்டிகள் விறுவிறுப்பாகவும், ரசிகர்கள் ரசிக்கும்படியும் அமைந்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், அணிகளின் மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஒருமித்த கருத்துக்களைப் பெற்ற பின்னரே பிசிசிஐ தனது அடுத்தகட்ட முடிவை எடுக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி, இம்பாக்ட் பிளேயர் விதி, நடுவர் செயல்பாடுகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலைகள் குறித்து விரிவான கருத்துக்களை அனுப்புமாறு அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ கடிதம் அனுப்பியுள்ளது.

அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆகஸ்ட் 31 மாலைக்குள் தங்களது இறுதி கருத்துக்களை பிசிசிஐ-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கருத்துக்களின் அடிப்படையில், 2027 ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதியைத் தொடர்வதா அல்லது சில மாற்றங்களுடன் செயல்படுத்துவதா என்பது குறித்து பிசிசிஐ இறுதி முடிவை எடுக்க உள்ளது.

பிசிசிஐயின் இந்த முடிவை பொறுத்தே ஐபிஎல் தொடரின் எதிர்காலப் போக்கும், ஆல்-ரவுண்டர்களின் பங்களிப்பும் அமையும் என்பதால் இந்த கருத்துக் கேட்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.